கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை, அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன் 2011,2016,2021 என அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனைப் படைத்தவர் விஜயதரணி. காங்கிரஸில் அவர் இருந்தபோது, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டதாகவும், ஆனால் டெல்லி தலைமை அவரை கண்டுக்கொள்ளவே இல்லை என்று கூறப்பட்டது. இதனால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ பதவியே போனாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியேறினார்.
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி சத்தியமூர்த்தி பவனிலிருந்து வெளியேறிய அவர் நேராக சென்றது கமலாலயத்திற்கு. காங்கிரஸ் டூ பாஜக சென்றால் எம்.பி. பதவி கிடைக்கும் என்று நினைத்த விஜயதரணிக்கு அங்கும் பெருத்த ஏமாற்றம் தான். அப்போ வரும்… இப்போ வரும்… என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த விஜயதரணிக்கு, பாஜக மேலிடம் கல்தா கொடுத்துக் கொண்டே இருந்தது
.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததையடுத்து, திமுக, அதிமுக, பாஜக என பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் தவெகவில் ஐக்கியமாகிவருகின்றனர். தவெகவும் தங்களை நம்பி வந்தவர்களுக்கு பொறுப்புகளை அள்ளிக் கொடுத்து வாழவைத்து வருகின்றது.
இதுதான் தனக்கான நேரம், எப்படியாவது தவெகவில் பெரிய பொறுப்பை வாங்கிவிட வேண்டியதுதான் எனக் கணக்கப் போட்டுள்ள விஜயதரணி, பாஜகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாக உள்ளார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கேற்றார் போல, கமலாலயத்தில் இருந்து பனையூருக்கு வந்துள்ளார் விஜயதரணி. முதலமைச்சர் விஜயை சந்தித்ததும் தவெக இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





