Home அரசியல் மகனா? மருமகனா? மண்டையை பிய்த்துகொள்ளும் ஸ்டாலின்! – Kumudam

மகனா? மருமகனா? மண்டையை பிய்த்துகொள்ளும் ஸ்டாலின்! – Kumudam

0


திமுகவில் மகனுக்கும் மருமகனுக்கும் இடையிலான மறைமுக அரசியல் போட்டி காரணமாக தலைவர் ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளதாகவும் அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து அறிவாலய வட்டாரங்களில் ஹாட் டாபிக்…

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பின் நிறுவனத்தின் தேர்தல் வியூகங்களே காரணம் என்றும் இதனால் பல நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில் கட்சி மறுசீரமைப்பு பணிகளில் மீண்டும் சபரீசனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

திமுக தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கான வேலைப்பாடுகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதற்கான சீனியர்களுக்கு இனி ரெஸ்ட் கொடுத்துவிட்டு இளம் ரத்தத்தை இறக்கி விடுவோம் என்று அதற்காக புதிய 9 தீர்மானங்களை  வகுத்துள்ளன.

இதற்கிடையில்  தேர்தல் வியூகங்களை அமைப்பதில் பிரபலமான சுனில் கனுகோலுவின் ஆலோசனைகள் மற்றும் அவரது குழுவின்  செயல்பாடுகள் குறித்து திமுகவுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டத்தாக கூறப்படுகிறது.

2022ம் ஆண்டு சபரீசனால் தொடங்கப்பட்ட ‘பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க்’ எனப்படும் ‘பென்’ நிறுவனம், ஆரம்பத்தில் ஊடக ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
பின்னர், கட்சியின் களப்பணிகளை கண்காணிப்பது, வாக்காளர் தரவுகளை ஆய்வு செய்வது, தேர்தல் வியூகங்களை வகுப்பது, வேட்பாளர் தேர்வில் ஆலோசனை வழங்குவது என அதன் பங்கு படிப்படியாக அதிகரித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சபரீசனின் செல்வாக்கு கட்சிக்குள் மேலும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ‘பென்’ நிறுவனத்தின் தேர்தல் சார்ந்த செயல்பாடுகளும் அதிகரித்ததாக நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. தலைவர் ஸ்டாலின் அமைத்த அதிரடியான ஆய்வுக்குழு மாவட்டத்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் பொழுது தான் உண்மை வெட்ட வெளிசத்திற்கு வந்தது.தோல்விக்கு காரணம் மாவட்டச்செயலாளர்களின் மெத்தனபோக்கு என்று அக்குழு உண்மையை உடைத்தது.

இது ஒருபக்கம் இருக்க கட்சியில் உள்ள சீனியர்களிடம் கருத்து கேட்கும் போது  பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் ‘பென்’ நிறுவனம் தான் இதற்கு காரணம் அவர்கள் கட்சியை வழிநடத்தினார்கள் ஆனால் தற்போது தோல்விக்கு காரணம் பென் நிறுவனம் தான் என்று சீனியர் கருத்து தெரிவித்தனர்.

சீனியர்களின் கருத்தால் தேர்தல் தோல்விக்கு பிறகு சபரீசனின் அரசியல் செயல்பாடுகள் ஓரளவு பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும் உதய் மற்றும் ஸ்டாலின் தரப்பு செக் வைத்தாகவும் கூறப்படும் நிலையில் தற்போது மீண்டும் கட்சிக்குள் உள்ள நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் சில காலம் அறிவாலய வட்டாரத்தில் ஒதுங்கியிருந்த சபரீசன் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து தன்னிடம் பழி சுமத்தப்படுவதை நான் ஏற்று கொள்ள மாட்டேன் என்றும் இதுதொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் அவர் தனது தரப்பு விளக்கத்தை கடுமையாக முன்வைத்ததாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாக ஒவ்வொரு முறையும் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். ஆனால், சீனியர்கள் அதிருப்தி அடைவார்கள், உதயநிதியின் ஆதரவாளர்களுக்கு அதிக பொறுப்புகளை வழங்க முடியாது என கூறி முடிவுகள் தாமதப்படுத்தப்பட்டன. இப்போது தோல்விக்கான முழுப் பழியையும் என் மீது சுமத்துவது எப்படி நியாயமாகும்?” என அவர் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும், பலவீனமான வேட்பாளர்களைத் தவிர்க்க வேண்டும் எனத் தான் முன்கூட்டியே அறிவுறுத்தியதாகவும் சபரீசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசியல் எழுச்சி உருவாகி வருவதை கருத்தில் கொண்டு தேர்தல் வியூகங்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதாகவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“2021-ல் திமுக வெற்றி பெறுவதற்காக எவ்வாறு பணியாற்றினேன் என்பது தலைவருக்குத் தெரியும். 2026 தேர்தலிலும் அதைவிட தீவிரமாகவே பணியாற்றினேன். ‘பென்’ நிறுவனத்திடம் இருக்கும் தரவுகளும் தேர்தல் சார்ந்த தகவல்களும் மிகப்பெரிய அளவில் உள்ளன. அந்த அளவுக்கு கட்சிக்காகவும் தேர்தலுக்காகவும் பணியாற்றியிருக்கிறோம்” என சபரீசன் தனது தரப்பை ஸ்டாலினிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சபரீசன் மீண்டும் முக்கியத்துவம் பெறுவது, உதயநிதி தரப்புடனான உறவு மற்றும் கட்சியின் அடுத்தகட்ட தேர்தல் வியூகங்களில் யாருடைய ஆதிக்கம் மேலோங்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
“மகனுக்கும் மருமகனுக்கும் இடையிலான மறைமுக அரசியல் போட்டி காரணமாக தலைவர் ஸ்டாலினும் குழப்பமான சூழ்நிலையில் இருப்பதாக” திமுக சீனியர்கள் சிலர் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால், அறிவாலயத்தில் தற்போது பேசுபொருளாக இருப்பது ஒன்றே — சபரீசன் மீண்டும் முழு வீச்சில் களமிறங்குகிறாரா? ‘பென்’ நிறுவனத்தின் வியூகங்கள் மீண்டும் திமுகவின் தேர்தல் பணிகளில் ஆதிக்கம் செலுத்துமா? அல்லது உதயநிதி தரப்பு புதிய வியூகத்தை வகுக்குமா? என்பதுதான்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version