எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை ஆய்வு செய்தபோது, மிகவும் பிரகாசமான சிவப்பு நிறப் புள்ளி ஒன்று விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. MoM-BH-1* என அழைக்கப்படும் இந்தப் பொருள், பூமியில் இருந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Cetus எனப்படும் திமிங்கல விண்மீன் கூட்டத்தில் காணப்படுகிறது.
இந்த விண்பொருள் பிரபஞ்சம் தோன்றி சுமார் 660 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முதலில் இது ஒரு மிகப்பிரகாசமான ஆரம்பகால விண்மீன் மண்டலமாக இருக்கலாம் என நினைக்கப்பட்டது. ஆனால் அதன் ஒளியை விரிவாக ஆய்வு செய்தபோது, வழக்கமான நட்சத்திரங்கள் அல்லது விண்மீன் மண்டலங்களால் விளக்க முடியாத பல தனித்துவமான அம்சங்கள் தெரியவந்தன.
நட்சத்திரத்திற்குள் கருந்துளையா?
விஞ்ஞானிகளின் தற்போதைய கணிப்பின்படி, இந்த மர்மப் பொருளின் மையத்தில் சூரியனை விட சுமார் 1 லட்சம் மடங்கு அதிக நிறை கொண்ட கருந்துளை இருக்கலாம்.
அந்த கருந்துளையைச் சுற்றி மிகப்பெரிய அடர்த்தியான வாயு மேகம் ஒன்று இருப்பதாக கருதப்படுகிறது. கருந்துளையின் ஈர்ப்பு விசையால் அந்த வாயு சூடேறி, மிகப்பெரிய அளவில் ஆற்றலை வெளியிடக்கூடும். வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்த வாயு அமைப்பு ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
இதன் காரணமாகவே இதனை விஞ்ஞானிகள் ‘Black Hole Star’ என்று அழைக்கின்றனர்.
ஏன் இது முக்கியமான கண்டுபிடிப்பு?
இந்த கண்டுபிடிப்பு உண்மையானது என்பது உறுதி செய்யப்பட்டால், பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் உருவான மிகப்பெரிய கருந்துளைகளின் தோற்றம் குறித்த பல ஆண்டுகால மர்மத்திற்கு விடை கிடைக்கலாம்.
நமது பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் மிகப்பெரிய கருந்துளை உள்ளிட்ட இன்றைய Supermassive Black Holes எவ்வாறு உருவாகின என்பதற்கான தொடக்க கட்டமாக இந்த வகையான விண்பொருட்கள் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துவரும் மர்மமான ‘Little Red Dots’ எனப்படும் சிறிய சிவப்பு நிற விண்பொருட்களின் தன்மையையும் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவக்கூடும்.
இந்த கண்டுபிடிப்பை வழிநடத்தியவர் ஹைதராபாத்தில் பிறந்த வானியலாளர் ரோஹன் நாயுடு. இதன் மூலம் பிரபஞ்சத்தின் ஆரம்பகால கருந்துளைகள் மற்றும் விண்மீன் மண்டலங்களின் உருவாக்கம் குறித்து புதிய ஆய்வுப் பாதை திறந்துள்ளது.





