back to top
18.8 C
London
Sunday, August 16, 2026
No menu items!
Homeஅரசியல்ராமதாஸை பழி தீர்க்கிறாரா புதுவை ரங்கசாமி? அம்பு ஸ்ரீகாந்தியா சேலம் அருளா... - Kumudam

ராமதாஸை பழி தீர்க்கிறாரா புதுவை ரங்கசாமி? அம்பு ஸ்ரீகாந்தியா சேலம் அருளா… – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். “அரசியல் தட்பவெப்பம் எப்படி மாறும், யார் மேலே செல்வார், யார் கீழே செல்வார் என யாராலும் கணிக்க முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2024 டிசம்பரில் பாண்டிச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் மோதல் வெடித்தது. கட்சி உடைந்தது. அக்கா ஸ்ரீகாந்தியும், தம்பி அன்புமணிக்கு எதிராக கம்பு சுற்றினார். இது ராமதாஸை சசிகலாவோடு கூட்டணி வைக்கும் அளவுக்கு தள்ளியது. ஆனால், தேர்தல் முடிவுகள் அன்புமணிக்கே சாதகமாக அமைந்தன. தொடர்ந்து சமீபத்தில் நடந்த சமாதானம், அன்பு தழுவல், ராமதாஸ் ஓய்வு இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

ராமதாஸின் அரசியல் துறவறம் என அறிவிப்பு வந்த நிலையில், அவரின் மகள் ஸ்ரீகாந்தியும், அவரின் மகன் முகுந்தனும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றனர். ரங்கசாமியும் விபூதி பூசி ஆசி வழங்கினார். இருவரும் என்.ஆர்.காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 24ம் தேதி சேலத்தில் ஒரு விழாவில் கலந்துகொள்ள ரங்கசாமி சென்றார்.

அங்கே பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. சேலம் அருள், ரங்கசாமியை சந்தித்து ஆசி வாங்கியதோடு, ‘நான் என்.ஆர். காங்கிரஸை தமிழ்நாட்டில் வளர்க்கிறேன். உங்க ஆசி மட்டும் இருந்தால் போதும் பணமெல்லாம் வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். இது ரங்கசாமியை சிந்திக்க வைத்திருக்கிறது. ‘அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்! என்ற கட்சியை (என்.ஆர்.காங்கிரஸ் ) 2011ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி, ஆச்சர்யப்படும் வகையில் இரண்டே மாதங்களில் ஆட்சியைப் பிடித்தவர் ரங்கசாமி. கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸில் முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராக அப்போதைய காங்கிரஸ் தலைவர்களான நாராயணசாமி, வைத்தியலிங்கம், நமச்சிவாயம் உள்ளிட்டோர் கம்பு சுற்ற அவரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டது.

அப்போது, தைலாபுரம் சென்று பா.ம.க. எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ராமதாஸிடம் ரங்கசாமி கேட்க, அகில இந்திய அளவில் காங்கிரஸோடு பா.ம.க. கூட்டணியில் இருந்ததாலும், அன்புமணி கேபினட் அமைச்சராக இருந்ததாலும் ரங்கசாமிக்கு அவர் ஆதரவு அளிக்கவில்லை. அதோடு, வைத்தியலிங்கம் முதல்வராக வருவதற்கு ராமதாஸ் ஆதரவாக இருந்தார் என்ற கோபமும் இன்றுவரை ரங்கசாமிக்கு உண்டு. அதனால்தான் புதுச்சேரியில் என்.டி.ஏ. கூட்டணியில் பாமக இருந்தாலும். சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூட பா.ம.க.வுக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஒதுக்கியது இல்லை. இதனால் புதுச்சேரி பா.ம.க. தனித்தே களம் கண்டுவந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலும் இதே நிலைதான்.

என்.ஆர்.காங்கிரஸின் ஆரம்பகால பொதுச்செயலாளர் தாடி பாலன் என்பவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸார் பலர் சென்று, ‘தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் ஆரம்பிக்க வேண்டும்’ என 2012 முதலே கேட்டுவந்தனர். ஆனால், அப்படி ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் செலவு செய்ய முடியாது என எண்ணி அதை அவர் ஒதுக்கிவைத்தார். மேலும், ‘தமிழ்நாட்டில் வலுவாக இருக்கும் அதிமுக, திமுக போன்ற திராவிடக் கட்சிகள் புதுச்சேரியில் தனிக்கவனம் செலுத்தினால் என்.ஆர். காங்கிரஸுக்கு அதிகப்படியான சிக்கல் ஏற்படும்’ எனவும் அவர் நினைத்தார். பிறகு உடல்நிலை சரியில்லாமல் கொரோனா காலத்தில் தாடி பாலன் இறந்துவிட்டார். அதன்பிறகு இன்றுவரை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பொதுச்செயலாளர் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ரங்கசாமிக்கு மிக நெருக்கமான விஜய்யின் புதிய கட்சியான த.வெ.க. தமிழ்நாட்டில் அரியணையில் அமர்ந்திருக்கிறது. அதனால் தேர்தல் செலவெல்லாம் தேவையில்லை என உணர்ந்த ரங்கசாமி, தற்போது தமிழ்நாட்டில் தனது கட்சியை அறிமுகப்படுத்தி ஆழம் பார்க்கலாம் என யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பிரபலம் ஒருவரிடம் விவாதிக்க அவர் சேலம் அருளை முன்மொழிந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் திடீர் ட்விஸ்ட்டாக, அருளுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என ஸ்ரீகாந்தியும் முகுந்தனும் ரங்கசாமியை சந்தித்து முக்கியப் பதவி கேட்டிருக்கிறார்கள்” என்று முடித்துக்கொண்டனர்.

இதுகுறித்து புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் பேசினோம். “ஆகஸ்ட் 9ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் காமராஜர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. அதற்கு பலரை அழைத்திருக்கிறோம். யார், யார் வருகிறார்கள் என பார்த்து அதற்கடுத்த 15 நாட்களில் தமிழ்நாட்டில் கட்சித் தொடங்கும் நாளை குறிப்போம். நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றையும் தொடங்குவோம்” என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க சேலம் அருளை தொடர்பு கொண்டோம். “நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. என்ஆர். அய்யாவை சந்தித்து ஆசி பெற்றேன். அவர் நல்ல மனிதர், அப்பழுக்கற்றவர். அவருடன் அரசியல் செய்ய வேண்டும் என இறைவன் வழிகாட்டினால் கண்டிப்பாக நடக்கும். தற்போது ஆடி மாதம் என்பதால் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆடி முடிந்து நல்ல முடிவெடுப்பேன். ஆகஸ்ட் 9ம் தேதி என்.ஆர். அய்யா பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அதில் கலந்துகொள்வேன்” என்றார்.

தமிழகத்தில் கட்சி தொடங்குவதற்கு முன்பே கோஷ்டிப் பூசல் தலைகாட்டுகிறதே. நல்ல சகுனம்தான்!

குமுதம் செய்திகளுக்காக பி.கோவிந்தராஜூ.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here