
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி மதுரை வெற்றி திரையரங்கிற்கு வந்திருந்த நடிகர் விஷ்ணு விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், ‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மதுரை மக்கள் எப்போதும் நல்ல படங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறினார். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகளுடன் இணைந்து ‘அப்படி போடு’ பாடலுக்கு நடனமாடியதையும் மகிழ்ச்சியான அனுபவமாக விவரித்தார்.
சினிமா என்பது பொழுதுபோக்கை மட்டுமல்ல, சமூகத்திற்கு நல்ல கருத்துகளையும் கொண்டு செல்லும் ஊடகமாக இருக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் கூறினார். ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் மூலம் வீட்டுத் தொழில்களை கவனிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை வெளிக்கொணர முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
திருமண வாழ்க்கை குறித்து பேசிய அவர், தன்னுடைய முதல் திருமண அனுபவம் பல பாடங்களை கற்றுக்கொடுத்ததாக கூறினார். கணவன்-மனைவி உறவில் பொறுமையும் விட்டுக்கொடுத்தலும் முக்கியம் என்றும், உடனடி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
‘ரீல்ஸ் மூலம் படங்களும் ஹிட் ஆகின்றன, ஆட்சிகளும் மாறுகின்றன’ என்ற கேள்விக்கு பதிலளித்த விஷ்ணு விஷால், காலத்திற்கேற்ப மனிதர்களும் மாற வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது ‘ரீல்ஸ் யுகம்’ நடைபெற்று வருவதாகவும், அதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்றும், அதே நேரத்தில் ரீல்ஸைத் தாண்டியும் வாழ்க்கை இருப்பதை மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். சில பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்றும், அந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘ராட்சசன் 2’ திரைப்படம் கண்டிப்பாக உருவாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதன் கதை தயாராக உள்ளதாகவும் விஷ்ணு விஷால் கூறினார். தற்போது ‘இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாக தயாராக இருப்பதாகவும், அதன் பின்னர் ‘ராட்சசன் 2’ பணிகள் முன்னேறும் என்றும் அவர் தெரிவித்தார்.



