எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் முதலில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தணிக்கை தொடர்பான நடைமுறைகள் காரணமாக வெளியீடு தாமதமானது. ஒருபக்கம் இப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இவ்வழக்கு இப்போது வரை நடந்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், ஜனநாயகன் திரைப்பட்த்தின் தயாரிப்பாளருக்கு அமைச்சருக்கு நிகரான அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது.
சரி எப்போது தான் பட்த்தை திரையரங்கில் வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தை ஆய்வு செய்த தணிக்கை வாரியம் மொத்தம் 13 திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
வன்முறை காட்சிகள், ஆபாச மற்றும் கடுமையான வசனங்கள் குறைக்கப்பட்டதுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்ற சில கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களையும் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டைக் காட்சிகளில் இடம்பெற்ற ரத்தக்கறை காட்சிகள், உடல் உறுப்புகள் சேதமடையும் காட்சிகள் உள்ளிட்டவை குறைக்கப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டு வெடிப்பில் உடல் பாகங்கள் சிதறும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 43 நொடிகள் நீக்கப்பட்ட பிறகு படத்தின் இறுதி நீளம் 180 நிமிடங்களாக, அதாவது 3 மணி நேர ஓட்ட நேரத்துடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
தணிக்கை சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுவதால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த மாதத்திலேயே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
