தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ் பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமில்லாமல் இபிஎஸ்அணி சிவி எஸ் அணி இந்த அணியில் எஸ் பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் தலைமையில் இரண்டாகப் பிளவுப்பட்டது.
எஸ் பி வேலுமணி அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் இருந்தனர். இதனை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் ,எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எல்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில் 4எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த நிலையில் முன்னாள் அமைச்சரான சி விஜயபாஸ்கர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் நாளை மறுநாள்(ஜுலை 2) முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகளுக்கு கடந்த வாரம் மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதில் அதிமுகவின் துணைப் பொதுசெயலாளர் பதவி எஸ் பி வேலுமணிக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த பதவியை மறுத்துள்ளார் .
ஜுன் 28 அன்று கோவையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வேலுமணி தன்னை நம்பி வந்த 30 மாவட்டச் செயலாளர்களுக்குப் பதவிகள் வழங்கப்படாதபோது அவர்களை புறக்கணித்துவிட்டு தான் மட்டும் தனித்து அப்பதவியை ஏற்பது நியாயமற்றது என்று கூறியுள்ளார்.
மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை(ஜுலை 1) நடைபெறவுள்ள அதிமுக மகளிர் அணி கூட்டத்தை புறக்கணிக்க எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அதிமுக கட்சிக்குள் பல சிக்கல்கள் நிலவி வருவதால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
