தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் அஜித்குமார், தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘குட் பேட் அக்லி’ அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட நாட்களாக எடுக்கப்படும் விடாமுயற்சியின் ரீலிஸ் தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அஜித்தை பொறுத்தவரை, நடிப்பு மட்டுமின்றி பைக் ரேசிங், கார் ரேசிங், டிரோன்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகிய விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்களில் பங்கேற்பதில் அவர் எப்போதும் ஆர்வம் காட்டி வருபவர்.
இந்நிலையில், அஜித் மீண்டும் கார் ரேஸில் ஈடுபட உள்ளார் என்று வெளியாகி இருக்கும் தகவலால் ரசிகர்களை உற்சாகமாகியுள்ளனர்.
2025ம் ஆண்டு நடக்க உள்ள European GT championship கார் பந்தய போட்டியில் அஜித் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக பிரபல கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ”ஐரோப்பிய ஜிடி ரேஸிங் போட்டியில் அஜித் பங்கேற்க உள்ளார். அவர் உண்மையில் ஒரு லெஜண்ட். கார் பந்தயத்தில் அனுபவம் இல்லை என்றாலும், கேரியரை தாமதமாக தொடங்கினாலும் கார் ரேஸிலும் அஜித் தனித்துவமிக்கவர். அஜித்தின் திறமைக்கு எல்லையே இல்லை. அவர் சிறந்த மனிதநேயர். ஆல் தி பெஸ்ட் தல. கார் பந்தயத்தில் நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தால் அது எனக்கு பாக்கியமாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
அஜித்குமார் மீண்டும் கார் ரேஸூக்கு திரும்ப இருப்பதை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.







