தமிழ் சினிமாவின் தி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாராக கெரியரின் உச்சத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் நடித்த கூலி படத்தின் வசூல் சுமாராகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு செம்ம விருந்து என்றே சொல்ல வேண்டும். காரணம், வின்டேஜ் தலைவர் ரீகியேஷனை ஏஐ மூலமாக லோகி செய்தது ரஜினி ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக இருந்தது.
கூலி படத்தைத் தொடர்ந்து, அடுத்தது தலைவரை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், ஜெயிலர் 2, KHvsRK, தலைவர் 173 என பேக் டூ பேக் படங்கள் லைன் கட்டி நிற்கின்றன. ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிந்த நிலையில், கமலுடன் இணைந்து நடிக்கும் படத்துக்கான கிளிம்ஸூம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் யார் ஹீரோ, யார் வில்லன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது.
கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ’தர்மன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டிராகன் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்க, அனிருத் இசையமைக்க, ஒரு Investigative Thriller-ஆக இப்படம் உருவாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் போஸ்டரில், தலைவர் ரஜினிகாந்த் ‘டாக்டர்’ கெட்டப்பில் செம்ம மாஸா… கிளாஸாக இருக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் சிம்ரன் இணைகிறார். இவர்களுடன் ராஷி கண்ணாவும் நடிக்கிறார்.
இப்படம் தொடர்பாக பேசிய படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், “நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாமே என இருவரும் பேசினோம். 40 வருடங்கள் போயிடுச்சு. இப்ப 2 படம் பண்றோம். இது ஒன்னு, இன்னொன்னு” என்று நெல்சனுடன் இணைந்து நடிக்கும் படம் குறித்தும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “தர்மன் படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜூன் 25) தொடங்குகிறது. படையப்பா – வேட்டையாடு விளையாடு படங்களின் கலவையாக தர்மன் படம் இருக்கும்” என தெரிவித்தார்.
மேலும், “தர்மன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் உடன் முதல்முறையாக இணைகிறேன். இப்படத்தில் 8 பாடல்கள் உள்ளன. 8-ம் வெவ்வேறு Genre, இது அனிருத்தின் இசைத்திறமைகளை வெளிகாட்டும் படமாக இருக்கும். முதற்கட்ட படப்பிடிப்பில் தலைவர் Intro பாடலை படமாக்க போகிறோம்” என்று இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறினார்.
கடைசியாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சிவாஜி படத்தின் போதே ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண வேண்டும் என கமல் கேட்டார். அதன் பிறகு அவரும் பிஸியாகி விட்டார், நானும் பிஸியாகி விட்டேன். கடைசியாக என்னைச் சந்தித்த போது, கட்டாயம் ஒரு படம் பண்ண வேண்டும் என்றார். உடனே நானும் சரி பண்ணுவோம் என்று சொன்னேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த படத்திற்கு அஸ்வந்த் மாரிமுத்து நான்காவது இயக்குனர். முதலில் ரவிக்குமாரை யோசித்தோம். அதன்பிறகு சுந்தர் சி-யிடம் பேசினோம், ஆனால் அவருக்கு வேறு ஒரு படம் இருந்ததால் வர முடியவில்லை. அதன் பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அது மிகவும் சென்சிட்டிவ் சப்ஜெக்ட், அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டோம். அதன் பிறகுதான் அஸ்வந்த் மாரிமுத்து இந்த திரைப்படத்திற்குள் வந்தார்” என்று கூறினார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று இப்படம் வெளியாகிறதா என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதாவது ‘தர்மன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினியின் வாட்சில் வெளியீட்டு தேதியை ஹிண்ட் கொடுத்து இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
