சொத்து பிரச்சனையில் அம்மாவை கொன்ற தாய்மாமன்களை போட்டுத்தள்ளி, ஜெயிலுக்குப் போகும் லோகேஷ் கனகராஜ், ஜெயிலில் கிடைத்த நண்பர்கள் சிலர் உதவியுடன் தப்பித்து வந்து ரவுடி ஆகிறார். சாதாரண ரவுடியல்ல, போலீஸிடமிருந்து நவீன ஆயுதங்களை கொள்ளையடித்து நக்சல்கள், தீவிரவாதிகள் ரவுடிகளிடம் விற்கும் வெப்பன்ஸ் மாஃபியா கேங் லீடர். ஆனா பாக்குறதுக்கு பைசாவுக்கு வழியில்லாத பக்கி மாதிரிதான் திரிவாங்க, கெத்துக்கு மட்டும் குறைச்சல் இருக்காது.
இந்த கேங்கை கிரிஷ் தயாள் தலைமையிலான போலீஸ் படை தீவிரமாக தேடி வருகிறது. அந்த நேரத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது…
தன் பையனின் படிப்புக்காக நிலத்தை விற்று ஏழு லட்சம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு செல்லும் ஒரு ஏழை விவசாயியை கொன்று, அந்தப் பணத்தை ஆட்டையைப் போட்டு விடுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. மகனையும், பணத்தையும் பறிகொடுத்த பெரியவர் பேரனுடன் சென்று ரவுடி லோகேஷ் கனகராஜிடம் விஷயத்தை சொல்கிறார். அந்த ஏழு லட்ச ரூபாயை லோகேஷ் எப்படி மீட்டுக் கொடுக்கிறார் என்பதுதான் கதை?
ஆனால் அது மட்டும் ஒரு ஆக்ஷன் மசாலாவுக்கு போதாதே… இந்த இரண்டு நிமிடக் கதைக்குள் வாமிகா, சஞ்சனா என இரண்டு அழகான ஹீரோயின்களை எப்படியும் திணித்துவிட வேண்டும் என்று தீவிரமாக டிஸ்கஸ் பண்ணி பாடகி கம் செக்ஸ் ஒர்க்கராக இருவரையும் திரைக்கதைக்குள் சொறுகியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அவர்களுக்காகவே ஆங்கில கவ் பாய் படங்களைப் போல் மதுபான விடுதிகளை உருவாக்கி, மொத்தப் படத்தையும் அதிலேயே முடித்துவிட்டார்கள்.
படத்தில் வன்முறை அதிகமிருந்தாலும் வசனங்கள் அதை நியாயப் படுத்துகின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை சிறப்பு. அனிருத்தின் இசை சுமார் ரகம்.
வில்லனால் சஞ்சனா கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சி ஹேராம் இமிடேஷன் என்றாலும் இதயத்தை நடுங்க வைக்கிறது. சஞ்சனாவின் பாடி லாங்வேஜ் கெத்து கிளர்ச்சி… முதன்மை நாயகி வாமிகாவின் போதையான பார்வையும் பரிதாபகரமான கண்ணீரும் பாயும் புலி போன்ற ஃபைட்டும் மனதோடு ஒட்டிக்கொள்கிறது.
ஒரு ஒழுக்கம் கெட்டவனை ஹீரோவாக், உண்மையானவாக, பெருந்தன்மை மிக்கவனாக காட்டுவதற்காக ஹீரோயின்களை தரம் கெட்டவர்களாக, தாழ்வு மனப்பான்மை உள்ள்வர்களாக, தன்னம்பிக்கை இல்லாதவர்களாக சித்தரிக்கும் தமிழ் சினிமாவின் பெண்களுக்கெதிரான வன்கொடுமை இதிலும் தொடர்கிறது.
லோகேஷ் கனகராஜ் லுக்கிங் குட் ஃபீலிங் பேட்…. ஏழு லட்ச ரூபாய்க்காக அவர் ஏகப்பட்ட கொலைகள் செய்ய, கடைசியில் அந்தப் பணத்தை வாமிகா தன் பழைய கஸ்டர்மகளிடம் கத்தியை காட்டாமல் புத்தியை காட்டி வசூலித்து காதல் பரிசாக அதை லோகேஷிடம் குடுத்து, ஹீரோவின் மொத்த கெத்தையும் வெத்தாக்கி விடுகிறார்.
கதாநாயகன் லோகேஷின் கண்டிப்பான அப்பாவாக வரும் கஸ்தூரிராஜா படம் முழுக்க ஒரு பொட்டல் காட்டில் ஒத்தையாக மோட்டாருக்கு காயில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் ஒரே ஒரு கஸ்டமர் தான்… ஆக்சுவலி அவரும் கூட கஸ்டமர் இல்லை கதையை தள்ளி தள்ளி கிளைமாக்ஸ்க்கு கொண்டு வந்து சேர்க்கும் புள்ளி. தலைவாசல் விஜய் பெயருக்கு தலைவர்.
வீம்பு போலீஸாக வரும் வில்லன் கிரிஷ் தயாள் வெட்டியாக ஒரு போலீஸ் டீ மோடு படம் முழுக்க சுத்திக்கொண்டு, கிளைமேக்ஸில் ஹீரோகையால் அடிபட்டு சாகிறார். ஒரு கிரிமினலை பிடிக்க ஒரு போலீஸ் உயர் அதிகாரியை நேர்ந்து விடுவதெல்லாம் சினிமா லாஜிக். இவர்களை தவிர்த்து ஒரு ஐம்பது பேர் நடித்திருந்தாலும் யாருடைய முகமும் கேரக்டரும் நினைவில் நிற்கவில்லை.
படத்தில் சேலம், ஈரோடு, கோவை, வேலூர் என்று பேசிக் கொள்கிறார்களே தவிர ஃபீலிங் எல்லாம் கிளிண்ட் ஈஸ்ட்வுட் உடன் மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் திரிந்து கொண்டிருப்பதை போல்தான் இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் நாயகிகளை லுக் விடுவதும், அவர்களும் குறுக்கெழுத்துப் போட்டிக்கான க்ளூ மாதிரி சுற்றிவளைத்து தங்கள் வாழ்க்கை சரிதிரத்தை தத்துவமாக சொல்வதும் பார்ப்பதற்கு இதமாக இருந்தாலும் படத்தின் கருவான ஒரு ஏழை சிறுவனுக்கு மறுக்கப்பட்ட தரமான கல்விக்கு அருகில் கூட வரவில்லை.
சிறுவனுக்காக ஒரு கொலை செய்யப் போன ஹீரோ லோகேஷ் கடைசியில் தன் காதலிகளுக்காக நூறு கொலை செய்து மொத்தத்தையும் சிறுவனின் கணக்கில் சேர்த்துவிடுகிறார்.
ஏழை சிறுவனின் படிப்புக்கான காசு பறிபோனது பற்றிய படத்தில் அதற்காக நூறு கொலை நடக்கிறதே தவிர ஒரு பிரேமில் கூட எதாவது ஒரு பள்ளிக்கூடத்தின் பெயர் பலகை கூட வராதது சிறப்பு. அதற்கு பதிலாக சிகெரெட், தண்ணி, செக்ஸ், கொலை, ரத்தம்… பிரமிப்பு.
டி.சி. – கொலை நகரம்
