திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் ஒரு கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 21 ஆம் தேதி அன்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 65-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 17 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஒடிசாவைச் சேர்ந்த பூர்ணிமா, திலோமினி, பராத்தி ஜிங்கா (19) உள்ளிட்ட 4 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதேபோல், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சிலா சுரின் (26) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருந்தது.
பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
இந்நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷி சுயங்கா (18) என்ற இளம் பெண் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 8 பேர் ஒடிசா மாநிலத்தையும், 2 பேர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்குப் பின் அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.







