விஜய்-சங்கீதா தம்பதியினர் 27 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று ( 07.08.2026) விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங் மூலம் சங்கீதா ஆஜரானார். ஆனால், விஜய் தரப்பில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேநேரத்தில், சங்கீதா தரப்பில் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் விசாரணை தொடங்கியபோது, நீதிபதி சங்கீதாவிடம் அரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். இதன் பின்னர், தான் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக சங்கீதா தெரிவித்தார்.
இத்தனை குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்த சங்கீதா, தற்போது அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளதால், அவர் மீண்டும் விஜய்யுடன் இணைய இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விவகாரத்தைப் பொறுத்தவரையில், விஜய்க்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விஜய்யின் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் பேசி, சங்கீதாவை இந்த முடிவை எடுக்க வைத்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை இதன் பிறகு விஜய்யும் சங்கீதாவும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா? அல்லது சட்டரீதியாக விவாகரத்து பெறாமல், பரஸ்பரம் பிரிந்து வாழ்வார்களா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
இத்தனை நாட்களாக குழந்தைகளுக்காக லண்டனில் சங்கீதா வசித்து வந்த நிலையில், திவ்யா சாஷா தனது படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். அதேபோல், மகன் ஜேசன் சஞ்சயும் இயக்குநராகியுள்ளார். இதனால், சங்கீதா சென்னைக்கே திரும்பி வருவாரா? தனது தொழில்களை தனது தந்தையிடமோ அல்லது நம்பிக்கைக்குரியவர்களிடமோ ஒப்படைத்துவிட்டு விஜய்யுடன் சேர்ந்து வாழ்வாரா? என்ற கேள்விகளும் பலரின் மத்தியிலும் எழுந்துள்ளன.
யார் இந்த சங்கீதா?
இலங்கைத் தமிழ் தொழிலதிபர் சொர்ணலிங்கத்தின் மகளான சங்கீதா, லண்டனில் வசித்து வருகிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகை என்று கூறப்படுகிறது. 1996ஆம் ஆண்டு ‘பூவே உனக்காக’ படத்தை பார்த்த பிறகு, சென்னைக்கு வந்து எப்படியாவது விஜய்யை பார்க்க வேண்டும் என விரும்பியதாக கூறப்படுகிறது.
மேலும், ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றபோது சங்கீதா, விஜய்யின் நடிப்பை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. அப்போது விஜய்க்கும் சங்கீதாவின் எளிமை மிகவும் பிடித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஒரு முறை தனது பெற்றோரை வந்து பார்க்குமாறு விஜய் சங்கீதாவை அழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் சங்கீதாவும் விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபாவை நேரில் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது விஜய்யின் பெற்றோருக்கும் சங்கீதாவை பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், முறைப்படி சங்கீதாவின் பெற்றோரிடம் விஜய்யின் பெற்றோர் பெண் கேட்டனர். இதையடுத்து, கடந்த 1998ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி விஜய்யும் சங்கீதாவும் தங்களது திருமணத்தை லண்டனில் பதிவு செய்தனர். பின்னர், 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, ராஜா முத்தையா மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் விஜய்யின் படங்களில் சிறிய காட்சிகளிலும், பாடல்களிலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றிருப்பது விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





