தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ’ஜெய் பீம்’ புகழ் தா.செ.ஞானவேல்ராஜா இயக்கியுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. வேட்டையன் படத்தின் வேலைகள் முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் நடித்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணம் அடுத்த கட்ட நடவடிக்கையாக மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அடி வயிறு வீக்கம், முதுகு பிரச்னைகளுக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு பின்னரே ரஜினியின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்தும், எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்கலாம் என்பது குறித்தும் தகவல் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, பிறகு தேவைப்படும் பட்சத்தில் ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ள மருத்துவக் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
