தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் ஆகி அது விவாகரத்தில் முடிந்ததது அனைவரும் அறிந்ததுதான். நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துலிபாவை மறுமணம் செய்து கொண்டுள்ளார். சமந்தா இப்போது திரைப்படங்கள் அதிமும்முரமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலங்கானாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, “பல பெண்கள் அமைச்சர் கே.டி.ராமாராவின் அராஜகத்தால்தான் விரைவிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள். போதைப்பொருள்களை உபயோகிக்கும் கே.டி.ஆர். பல பார்டிகளை நடத்துகிறார். அந்த பார்டிகளில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கும் விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என்று பேசியிருக்கிறார்.
இவரது பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நடிகை சமந்தா இவரது பேச்சுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
“கிளாமரான இந்த திரைத் துறையில் ஒரு பெண்ணாக வந்து பணியாற்றி தனது இடத்தை தக்கவைப்பது என்பது எவ்வளவு பெரியதென உங்களுக்கு தெரியுமா? காதலில் விழுவதும் பின்னர் அதிலிருந்து மீள்வதும், பின்னர் அதிலிருந்து எழுந்து சண்டையிடுவதும் சாதாரணமானதல்ல. இதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் கொண்டா சுரேகா அவர்களே.
நான் இந்தப் பயணத்தில் என்னவாகியிருக்கிறேன் என்பது குறித்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. தயவுசெய்து இதை சிறுமைப்படுத்தாதீர்கள். அமைச்சராக நீங்கள் கூறிய வார்த்தைகளின் கனம் பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மரியாதையாகவும் பொறுப்புடனும் அணுக வேண்டுமென கேட்டுக் கொள்கிகிறேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம். எங்களது விவாகரத்து இருவரும் சம்மதத்துடன் இணைந்து எடுத்த முடிவு. இதில் எந்த அரசியலும் இல்லை. உங்களது அரசியல் சண்டையில் எனது பெயரைச் சேர்க்காதீர்கள். நான் எப்போதும் அரசியலற்றவள்.” என்று கூறியிருக்கிறார்.
சமந்தாவைத் தொடர்ந்து நடிகர் நாக சைதன்யாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
“விவாகரத்து என்பது ஒருவர் வாழ்கையில் எடுக்கப்பட்ட மிகவும் வேதனையான மற்றும் துரதிர்ஷ்டவசமான முடிவுகளில் ஒன்றாகும். பல்வேறு கட்ட யோசனைகளுக்குப் பிறகே, நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிந்து செல்வதென ஒரு பரஸ்பர முடிவினை எடுத்தோம். இம்முடிவு மிகவும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அமைதியுடன் எடுக்கப்பட்ட முடிவு.
அப்படி இருந்தும் எங்களது விவாகரத்து தொடர்பாக பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் கேலிக்குரிய கிசுகிசுக்கள் இதுவரை வந்திருக்கின்றன. எனது முன்னாள் மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தேன்.
இன்று, அமைச்சர் கொண்டா சுரேகாவின் கூற்று பொய்யானது மட்டுமல்ல, அது முற்றிலும் கேலிக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்கள், ஆதரவு மற்றும் மரியாதைக்குத் தகுதியானவர்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது” என்று கூறியிருக்கிறார்.
