தளபதி ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் இறுதி படமான ஜனநாயகன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றே சொல்ல வேண்டும். தளபதியின் கடைசி படம், எச்.வினோத் டைரக்ஷன் என இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இப்படம் 2026 பொங்கல் ரிலீஸாக வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸாகாமல் போனது.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு நேர்மையானவரின் கதையாக மட்டுமல்லாமல், தேர்தல் நேரத்தில் மக்கள் விழிப்புடன் இருப்பது குறித்தான அவசியத்தையும் இத்திரைப்படம் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் பாஜக அரசு, அப்போதைய திமுக அரசு, அதற்கு முன்னிருந்த அதிமுக அரசு என அனைத்து அரசாங்கத்திலும் நடந்த மறக்க முடியாத, ஆறா வடுவாக உள்ள சம்பங்களை மையமாக வைத்து சில சீன்கள் உருவாக்கப்பட்டிருந்ததாகவும், தவெக சின்னம், டாட்டூ, கொடி போன்ற விஷயங்களும் இப்படத்தில் இடம்பெறுவதாகவும் கூறி, தணிக்கைச் சான்றிதழ் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
தற்போது வரை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின்அனுமதியைப் பெறுவதில் ஏற்பட்ட கடுமையான சிக்களால் நடந்ந சட்டப் போராட்டம் இன்னும் தொடர்கிறது, இதனால் இப்படம் இன்னும் திரையரங்கில் வெளியாகாமல் உள்ளது. இதற்கிடையில் தான், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிந்த அடுத்த நாள் ஏப்ரல் 9, ஜனநாயகன் திரைப்படம் ஃபுல் எச்.டி.யில் ரிலீஸ் ஆனது. இது படக்குழுவினர், ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒருபக்கம், இப்படத்தை தேர்தலுக்காக திட்டமிட்டே விஜய் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக லீக் செய்தார் என்றும், இதற்கு பின்னால் ஆதவ் அர்ஜூனாவே இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. மறுபக்கம், திமுக தான் காரணம், அண்ணனுடைய கடைசி படம் அவரை பழிவாங்கவே திமுக இப்படி கருப்பு ஆட்டை உள்ளே அனுப்பி லீக் செய்தது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போது, இந்த லீக் விவகாரம் தொடர்பாக, இதுவரை 19 கைது செய்யப்பட்டுள்ளனர், 3 பேர் மீடு குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது, விசாரணையும் நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் எப்போது தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, ஒரு குட் நியுஸ் வெளியாகியுள்ளது. அதாவது, முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளை(ஜூன் 22) முன்னிட்டு வரும் ஜூன் 19 அல்லது ஜூன் 22 ஆகிய தேதிகளில் ஒன்றை ஒட்டி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது படக்குழுவினர் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதற்காக டெல்லியில் முகாமிட்டுத் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஜூன் 19-க்குள் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டால் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடலாம் அல்லது வெள்ளிக்கிழமையான ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளி, சனி, ஞாயிறு என கள்ளாக்கட்டவே இப்படி ஒரு முடிவை படக்குழு எடுத்திருப்பதாகவும், ஒருவேளை அதிலும் சிறிய தாமதம் ஏற்படும் பட்சத்தில், அதிகபட்சமாக ஜூலை 3-ஆம் தேதிக்குள் படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பிற்காக ஒட்டுமொத்தக் கோலிவுட்டும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் வெளியீடு செய்திருந்தாலும் புதிய பொலிவுடனும் இறுதிக் காட்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியும் திரைப்படம் வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் விஜய் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
