ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருந்த சூழலில், விஜயபாஸ்கரின் விலகலும் அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ள ஒரு மீம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தலைமையிலான அரசை தொடர்ந்து “சோபா மாடல் அரசு” என விமர்சித்து வரும் உதயநிதி, தற்போது தவெக கொடி நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு சோபாக்களை கொண்ட மீமை வெளியிட்டுள்ளார்.
https://x.com/Udhaystalin/status/2066909442378199205?s=20
அதில் முதலில் “4 Seater Sofa” எனக் குறிப்பிடப்பட்ட சோபாவும், அதன் கீழ் “Much Bigger Now” என்ற வாசகத்துடன் “5 Seater Sofa” என மற்றொரு சோபாவும் இடம்பெற்றுள்ளன. தவெக சின்னம் பொறிக்கப்பட்ட குஷன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மீம், ஏற்கனவே தவெகவில் இணைந்த நான்கு எம்.எல்.ஏ.க்களையும், தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ள விஜயபாஸ்கரையும் மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விஜயபாஸ்கர் இதுவரை எந்தக் கட்சியிலும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. இருப்பினும், அவர் தவெகவை நோக்கி நகர்கிறார் என்று பரவலாகப் பேசப்படும் நிலையில், உதயநிதியின் பதிவு அதனை உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய்பாஸ்கர் திமுகவில் இணையக்கூடும் என்ற சில வதந்திகள் பரவிய நிலையில், உதயநிதி பகிர்ந்துள்ள இந்த மீம், அந்த சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் பல தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழலில், தற்போது விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் அந்த எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சில அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பனையூருக்கு படையெடுக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
