Home சினிமா “நானும் லிங்குசாமியிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே…”இயக்குநர் வசந்தபாலன் போட்ட பதிவு – Kumudam

“நானும் லிங்குசாமியிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே…”இயக்குநர் வசந்தபாலன் போட்ட பதிவு – Kumudam

0



நானும் இயக்குநர் லிங்குசாமியிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே என அமரன் படத்தால் மாணவருக்கு வந்த சோதனையை சுட்டிக்காட்டி இயக்குநர் வசந்தபாலன் பதிவிட்டுள்ளார்.

கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா பயணத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அமரன் படத்தில் ஒரு காட்சியில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்தியேன் தோன்றும் காட்சியில் மொபைல் எண் ஒன்று மொபைல் என்று பகிரப்பட்டுள்ளது.

அந்த மொபைல் எண் உரிமையாளரான பொறியியல் மாணவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருவதால் தூங்க முடியாமலும், சரியாக சாப்பிட முடியாமலும், வீட்டில் மற்ற வேலைகளை செய்ய முடியாமலும் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அமரன் படக்குழுவிற்கு ரூ.1.1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

இந்த செய்தியை பகிர்ந்து இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில், “ இயக்குநர் லிங்குசாமியால் எனக்கு அப்படியொரு சோதனை ஏற்பட்டது. சண்டக்கோழி திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக்காட்சியும் முதல் நாள் முதல் காட்சியும் பார்த்த நண்பர்கள் “சண்டக்கோழி திரைப்படம் பத்து ரன்!” என்று பாராட்டி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்.நான் லிங்குவிற்கு படம் பார்த்த நண்பர்கள் இப்படி பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார்கள், மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று லிங்குவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். லிங்குவும் நன்றி தெரிவித்து பதிலிட்டான்.
அச்சமயத்தில் நான் மதுரையில் வெயில் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அன்று பரத், பாவனா சம்மந்தமான காட்சி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள ஜனநெருக்கடியான பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வேலைகளில் இறங்கியிருந்தேன்.

நானும் கேமராவும் மறைவான இடங்களில் இருந்து கொண்டு என் அலைபேசி வாயிலாக உதவியாளர்களுக்கும் பரத்திற்கும் உத்தரவுகள் தந்தவண்ணம் இருந்தேன். காலை 7 மணியிலிருந்தே சம்மந்த சம்மந்தமில்லாத எண்களிலிருந்து என்னை அழைத்து நீங்க தான் நடிகர் விஷாலா?  இயக்குநர் லிங்குசாமியா?  என்றும் இடைவிடாத போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. என் படப்பிடிப்பு வேலையவே செய்ய முடியாத வண்ணம் இடைவிடாத அழைப்புகள். ஏண்டா என் நம்பர்ல எல்லாரும் கூப்பிடுறீங்க என்று டென்சனில் ஒரு அழைப்பாளரிடம் கத்தி விட்டேன். தினத்தந்தி விளம்பரத்தில் உங்கள் நம்பர் போட்டுருக்கு சார் என்றார் ஒருவர். தினத்தந்தி வாங்கி பார்த்தால் சண்டக்கோழி திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பதிவிட்டு கீழே என் அலைபேசி நம்பரைப் போட்டிருந்தார்கள். கடுப்பாகி போனை அணைத்து விட்டெறிந்தேன். 

அன்று படப்பிடிப்பு முடிந்து இரவு லிங்குசாமியிடம் ஏண்டா இப்படி போட்டீங்க? என்றேன். படத்தைப் பற்றிய பாராட்டுகளை இப்படி புதிய விளம்பர உத்தி வாயிலாக விளம்பரம் செய்ய முயன்றோம் என்று பதிலுரைத்தான். மனதிற்குள் வெங்காய உத்தி என்று திட்டினேன். படம் மாபெரும் வெற்றி என்கிற மகிழ்ச்சியில் இருந்தான் எதற்கு இந்த நேரத்தில் என் சங்கடங்களை அவனிடம் பகிர வேண்டுமென அதைப் பற்றி பேசாமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு அலைபேசியை அணைத்தேன். நீண்ட இரவு முழுக்க நீங்க விஷாலா லிங்குசாமியா என்று தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வந்த வண்ணம் இருந்தது. அந்த நம்பரை மாற்றிய பிறகு தான் தப்பித்தேன். நாமும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே.. டே நண்பா! குடும்பத்தோடு கேன்டில் லைட் டின்னர் தா !” என பதிவிட்டுள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version