பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்தச் சூழலில், “புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் தான் வரும்” என்று பதில் அளிப்பது போல அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசியுள்ளார்.
கட்டுனா பட்டினம்பாக்கம் தான்..
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் நவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக பட்டினப்பாக்கம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தைத் தவிர்த்து வேறு இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்க வேண்டுமென்றால், மகாபலிபுரம் அல்லது ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில்தான் அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அப்படி இடம் மாற்றப்பட்டால், அரசு அதிகாரிகள் தினமும் வந்து செல்வதற்கே அதிக நேரம் பிடிக்கும் என்றும், பயணத்துக்காகவே அரை நாள் செலவிட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் பாதிக்கப்பட மாட்டாங்க!
மேலும், தலைமைச் செயலகத்தைச் சுற்றி ஏற்கனவே ஏராளமான அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் பணியிடங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பட்டினப்பாக்கம் திட்டத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு தற்போது இல்லை என்பதை அமைச்சர் பேச்சு வெளிப்படுத்தியிருப்பது இந்த விவகாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





