back to top
21.6 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeதமிழ்நாடுBachelors-காக நாலு முழ வேஷ்டியை வழங்குகிறதா அரசு? ரேஷன் வேஷ்டி - சேலை பின்னணி என்ன?...

Bachelors-காக நாலு முழ வேஷ்டியை வழங்குகிறதா அரசு? ரேஷன் வேஷ்டி – சேலை பின்னணி என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



பொங்கல் வருவதற்கு முன்பாகவே, ரேஷன் கடைகளில் சிறப்புத் தொகுப்பு குறித்து பட்ஜெட் ஒதுக்குவது வழக்கமான ஒன்றுதான். எவருடைய ஆட்சியாக இருந்தாலும் பொங்கலுக்கு வேட்டி சேலை மற்றும் கரும்புடன் கூடிய பொருட்கள் வழங்குவதைக் கொண்டிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளை வீட்டில் அமரவைத்துவிட்டு, விஜய் தலைமையிலான அரசு, இன்றைக்கு 100 நாள் கடந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

சட்டசபையில், வரவிருக்கும் ஜனவரி மாத பொங்கலுக்கு மக்களுக்கு கொடுக்கப்படுகிற பொங்கல் சிறப்புத் தொகுப்பு குறித்தான பேச்சு ‘கிழிஞ்சது போ’ என்கிற அளவுக்கு பேசுபொருளாகியிருக்கிறது.

குடும்பத்தின் உறுப்பினர்களுடைய பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்தாலும், குடும்பத்தலைவனுக்கும் தலைவிக்கும் என வேஷ்டி சேலை கொடுக்கப்படுகிறது. அத்துடன் ஆயிரமோ ரெண்டாயிரமோ தருவதும் வழக்கமாகிவிட்டது. மக்களுக்கு புடவை வேஷ்டி தருவதற்குப் பின்னால், முக்கியக்காரணியாக இருப்பது… கைத்தறி நெசவாளர்களின் தொழில்!  நெசவாளர்களின் தொழிலையும் வயிற்றையும் கருத்தில்கொண்டு, அவர்களிடம் ஆர்டர் தந்து, கைத்தறி சேலைகளையும் வேஷ்டிகளையும் வாங்குகிறார்கள். இதற்காகவும் இவர்களுக்காகவும் சங்கங்கள் இருக்கின்றன என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான்!

அந்தக் காலத்தில் கதர்த் துணிகள் பயன்படுத்தப்பட்டன. துணியை வாங்கி தைக்கும் முறையும் இருந்தன. ஆனால் இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்களின் ஆடைகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறோம். குறிப்பாக ரெடிமேட் உலகமாகிவிட்டதே..!

அதற்காக, கதரில் இருந்தும் கைத்தறியில் இருந்தும் நெசவாளர்கள் விலகிவிடமுடியாது. தொழிலே பாதிப்பாகும். நசிந்துபோகும். அந்த நெசவாளர்களின் வாழ்வுக்கு ஆதாரமாகத்தான், பொங்கல் பண்டிகைக்கு புடவைகளும் வேஷ்டிகளும் பர்ச்சேஸ் செய்யப்படுகின்றன. இப்போது இந்த விஷயம்தான், பட்டிமன்றம் போல் சட்டமன்றத்தில் அனல் கிளப்பியிருக்கிறது.

திமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் எம் எல் ஏ, ‘திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் மக்களுக்கு எட்டுமுழ வேட்டிதான் வழங்கினோம். ஆனால் வருகிற பொங்கலுக்கு நாலுமுழ வேஷ்டி தருவதாக ஏன் மாற்றினீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். ‘நாங்கள் கருத்து கேட்டோம். பலரும் நாலு முழ வேஷ்டிதான் வேண்டும் என்றார்கள். ஆகவே இந்த முடிவுக்கு வந்தோம்’ என கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி பதில் அளித்தார். மீண்டும் ஆஸ்டின் எழுந்து ‘எட்டுமுழ வேஷ்டி வாங்கினால் நெசவாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்குமே…’ என்றார். உடனே அமைச்சர் விஜய் பாலாஜி, ‘நீங்கள் வழங்கிய வேட்டி சேலையெல்லாம் உடுத்திக் கொள்கிற தரத்திலேயே இல்லை’ என்று கொளுத்திப்போட்டார்.

அத்துடன் இன்னொன்றையும் சொன்னார்… ‘இந்த பொங்கலுக்கு கொடுக்கிற நாலு முழ வேஷ்டி எல்லோரும் ஆசையாக அணிந்துகொள்ளும் வகையில் தயார் செய்யப்படுகிறது. இந்த வேட்டிகளை அணிந்துகொண்டு, நாங்கள் சட்டசபைக்கு வருகிறோம். திமுகவினரும் அதிமுகவினரும் உங்களின் ஆட்சிக்காலத்தில் தந்த வேட்டியைக் கட்டிக்கொண்டு வாருங்கள், பார்க்கலாம்’ என ரூட்டை மாற்றினார்.

‘உண்மைதாங்க. அந்த வேட்டியையோ புடவையோ நாம கட்டிக்க முடியாது. நம்ம ஏரியால இருக்கிற கஷ்டப்படுறவங்களுக்கு வருஷாவருஷம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் பலரும்.
‘அந்த வேஷ்டியெல்லாம் சும்மா இரும்பு மாதிரி இருக்கும். இப்போ வர்ற வேட்டியை நம்பி இருக்கமுடியாது. எப்ப ‘டர்ரு’ன்னு கிழியும்னு சொல்லமுடியாது. ஆனா, அந்த நூல்கோர்ப்போட, கெட்டியா இருக்கும்’ என்று வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு மல்லுக்கு வருகிறவர்களும் இருக்கிறார்கள்.

‘நாலுமுழ வேஷ்டி பிரம்மச்சாரிகள்தான் அணிய வேண்டும். அதாவது திருமணமாகாதவர்கள்தான் அணியவேண்டும். அதேபோல் கிரகஸ்தர்கள், குடும்பஸ்தர்கள் எட்டுமுழவேஷ்டியே உடுத்திக்கொள்ள வேண்டும். ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படுகிற வேஷ்டி குடும்பத்தலைவனுக்கு! ஆகவே எட்டுமுழ வேஷ்டியே உசிதம்’ என்று முநீஸ்வர சாஸ்திர்கள் விளக்கம் தந்தார்.
இன்னொன்றும் சொன்னார்…

‘’நூறு இருநூறு வருடங்களுக்கு முன்பெல்லாம், ஒன்பதுக்கு அஞ்சு, பத்துக்கு அஞ்சு என்கிற வேஷ்டிகளே உடுத்தப்பட்டு வந்தன. இப்போது இவை குறிப்பிட்ட சாதிக்காரர்களுக்கு என்றாகிவிட்டது. ஆனால், இந்த வேஷ்டியை பஞ்சக்கச்சம் என்று கட்டிக்கொள்கிற வழக்கம், எல்லா பிரிவினரிடமும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், ஒற்றை வரிசை கொண்ட நாலுமுழ வேட்டி, இரண்டு வரிசை கொண்ட எட்டுமுழ வேட்டி என்பதில் சாதிய விழுமியங்கள் அடங்கியிருப்பதை சரித்திரங்கள் பறைசாற்றுகின்றன.

ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, எல்லோரும் எட்டுமுழ வேட்டி கட்டிக்கொள்கிற நடைமுறை என வளர்ந்துவிட்டோம்’’ என்று முநீஸ்வர சாஸ்திரிகள் சொன்னபோது, ‘அடக்கருமமே’ என்று தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றியது.

‘இந்தக் காலத்துல யாருங்க வேட்டியெல்லாம் கட்டிக்கிறாங்க?வேட்டி கட்டவும் பலருக்கு தெரியறதில்ல. ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ன்னு வந்திருச்சுங்களே’ என்று அங்கலாய்க்கிறவர்கள், வேஷ்டியை மடித்து அதன் மடித்துச் சொருகிய பக்கத்தில் இருந்து பிரித்தால், அதில், காசு, பணம், வெற்றிலை,சீவல் என அலமாரியே இருக்கிறது. ‘இப்பதான் வேட்டில, லுங்கில பாக்கெட் வந்திருச்சே’ என்று வேட்டி பாக்கெட்டில் இருந்து செல்போன் எடுத்து ஸ்மைல் காட்டுகிறார்கள் இளசுகள்.

‘அட சின்னாளப்பட்டியில கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டிவிடவா’ என்றும் ‘வேட்டி மடிச்சுக்கட்டு பாட்டை பொளந்துகட்டு’ என்றும் பாடல் பாடி, ஜாலி மூடுக்கும் மோடுக்கும் போகவேண்டியதுதான்!

‘எட்டு எட்டா பிரிச்சிக்கோ’னு ரஜினி சொன்னாரே… அதுல வேட்டியையும் சேத்திருக்கலாம் என்று சொன்ன ரஜினி ரசிகர், நாலு மட்டுமல்ல… எட்டும் அறிந்தவராகத்தான் இருக்கவேண்டும்!

– வி.ராம்ஜி



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here