‘தமிழக இடைத்தேர்தல் வெற்றிக்காக லண்டனுக்குப் போய் பிரசாரம் செய்திருக்கிறார் முதல்வர் விஜய். முதல்வர் போனது முதலீடுகளை மட்டுமல்ல, அஜித்தின் வாக்கு வங்கியையும் ஈர்க்கத்தான்’ என்று புதிரான விமர்சனத்தை சொல்லி கண்ணடிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்!
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் விஜய், உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித்தின் டீம் கலந்துகொண்ட லீமான்ஸ் கார் பந்தயத்தை துவங்கி வைத்தார். இதன் பின்னணியில் இடைத்தேர்தல் விவகாரம் உள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அவர்களிடம் பேசினோம்.
“தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் முடிவானது, விஜய்யின் ஆட்சி நிர்வாகத்துக்கு மக்கள் போட இருக்கின்ற மார்க். ‘மாற்றம், மாற்றம்’ என சொல்லித்தான் தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால், நூறு நாட்களில் விஜய் என்ன மாற்று அரசாங்கம் நடத்தியுள்ளார், தவெ.கவின் வெற்றிப் பயணம் தொடருமா என்பதையெல்லாம் இந்த இடைத்தேர்தல் சொல்லிவிடும்.
இரு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? எனக்கு ஒரு க்ளியர் பிக்சர் வேணும்’ என தன் அரசியல் பிரிவு தனி செயலாளரான ஜெகதீஷ் பழனிசாமிக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்தார் விஜய். அவரும் தன் டீமை இறக்கி தாராபுரம், மதுராந்தகத்தில் சீக்ரெட் சர்வே நடத்தினார். அதே வேளையில் உளவுத்துறை போலீஸாரின் ரிப்போர்ட்டும் வாங்கப்பட்டது. இரண்டையும் ஒன்று சேர்த்து அனலைஸ் செய்ததில் கிடைத்த ரிசல்ட்டானது முதல்வர் வட்டாரத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதாவது தவெகவுக்கான வெற்றி வாய்ப்பானது இரு தொகுதிகளிலும் பார்டரில்தான் நிற்கிறது என்பதே இந்த சர்வே முடிவாக இருந்திருக்கிறது. விசாரித்தபோது, ‘நடுத்தர வயது மற்றும் சீனியர்களின் வாக்கு வங்கிதான் இப்ப பயத்தை கொடுக்குது. இன்னமும் நாம சினிமா மாதிரிதான் ஆட்சி நடத்துறோம்னு விமர்சிக்கிறாங்க. தேர்தல் வாக்குறுதில சொன்ன மாதிரி மகளிர் உரிமைத்தொகையாக மாதம் 2,500 ரூபாய் கொடுக்காததை பெரிய ஏமாற்றமா பெண்கள் பார்க்கிறாங்க. மார்க்கெட்ல அரிசி, பருப்பு விலை ஏறிப்போனதையும் அரசாங்கம் கண்டுக்கலன்னு புலம்புறாங்க.
ஆண்களைப் பொறுத்தவரை ‘முதல்வர் லஞ்ச லாவண்யம் இல்லாம இருக்கிறார். ஆனா அமைச்சர்களும், அதிகாரிகளும் அப்படியில்ல. இங்கே என்ன மாறியிருக்குது?ன்னு விமர்சிக்கிறாங்க. இதெல்லாம்தான் நமக்கான சவால்கள். ஆட்சிமீது மக்களுக்கு ஏற்படும் சின்ன அதிருப்தியை கூட திமுக டீம் ஊதிப் பெருசாக்குறாங்க. ‘தாராபுரமும், மதுராந்தகமும் அதிமுக வென்ற தொகுதிகள். நீங்க கொடுத்த எம்.எல்.ஏ. பதவிய சுயநலத்துக்காக சத்தியபாமாவும், மரகதமும் தூக்கி குப்பையில போட்டிருக்காங்க. இது உங்க முகத்துல பூசப்பட்ட கரின்னு அ.தி.மு.க. பண்ற பிரசாரத்துக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது.
ஆனா இந்த ரெண்டு தொகுதிலயும் நம்மோட கட்சி வாக்கு வங்கியும், பொதுவான இளைஞர், இளம்பெண்கள் வாக்கு வங்கியும் ஓரளவு நமக்கு கைகொடுத்துடும். ஆனா, பார்டர்லயாவது நாம பாஸ் பண்ணணும்னா அதையும் தாண்டி ஒரு மேஜிக் பண்ணியாகணும்’ என சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பிறகு முதல்வரே ஓர்க் அவுட் பண்ணிக் கொடுத்ததுதான் அஜித்தோடு கைகோக்கும் திட்டம்.
‘அஜித்துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் வலுவான வாக்கு வங்கி ஒண்ணு இருக்குது. அவங்கள இம்ப்ரஸ் பண்ணிட்டா அந்த ஆதரவு தங்களுக்கு பிளஸ்ஸா மாறும்’னு பிளான் பண்ணினாங்க, இதை ஒர்க் அவுட் பண்ண அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை கூப்பிட்டு ஆலோசனை பண்ணிய போது அவர் சொன்ன பிளான் தான் லண்டனுக்கு நீங்க விசிட் போறப்ப அஜித் அங்கே ஒரு ரேஸில் இறங்குறார். நீங்க அப்ப டிராக்கில் போய் நின்னா இங்கே யூத் வாக்கு வங்கியை ஒட்டுமொத்தமா கவர் பண்ணிடலாம்ன்னு எடுத்து கொடுத்தார். முதல்வருக்கு இந்த ஐடியா ரொம்பவே பிடிச்சுபோனது.
ஆனால், அரசியல் மோட்டீவோடு அஜித்தை அப்ரோச் பண்ணினால் அவர் நிச்சயம் ஒத்துக்க மாட்டார். அதனால ‘தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கும் முகமாகங்கிற விசிட்டிங் கார்டோடு அவரை அணுகினாங்க அதுக்கு ஏத்த மாதிரி தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை நிறுவும் திட்டத்தை முதல்வர் சட்டசபையில் அறிவித்தது. அதற்கு அஜித் நன்றி தெரிவிச்சதுன்னு அடுத்தடுத்து இந்த பிளான் டெவலப் ஆனது.
பக்காவாக பிளான் பண்ணியபடி லண்டனில் எல்லாம் அரங்கேறியது. லண்டன் டிராக்கில் விஜய் ஓடிவந்து அஜித்தை கட்டிக்கொண்டது. அஜித்தின் கார் மீது ஏறி உட்கார்ந்து போஸ் கொடுத்தது, அஜித்தும் விஜய்யை ஆரத்தழுவியதுன்னு எல்லாவற்றுக்கும் சினிமா ரசிகர்களிடம் மாஸ் ரியாக்ஷன்கள்தான்.
தல தளபதியின் ரீயூனியனை விஜய் ரசிகர்கள் கொண்டாடுறாங்க. ஆனா அஜித் ரசிகர்கள் பலருக்கும் இது பிடிக்கல. ‘உங்களையும், உங்க குடும்பத்தையும் கேவலமா பேசிய டீம் அது. இப்ப அரசியல் லாபத்துக்காக உங்களை வந்து கட்டிப்பிடிக்கிறார் சி.எம். இதை நீங்க ஏத்துக்கலாம். ஆனா நாங்க ஏத்துக்க மாட்டோம்’னு பல ரசிகர்கள் கடுப்பை காட்டுறாங்க. லண்டனுக்கே வந்து விஜய் தன்னை சியர் அப் பண்ணியதன் பின்னணில் உள்ள அரசியல் அஜித்துக்கும் தெரியும். எனவே இடைத்தேர்தல் நேரத்தில் தனது ரசிகர்களுக்கு ஓட்டு போடுவது தொடர்பா எந்த சிக்னலும் அவர் தரமாட்டார். அவர்களாகவே விசிலை ஆதரித்தால்தான் உண்டு” என்று முடித்தனர்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏவான மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் இதுகுறித்து கேட்டபோது. “இரு தொகுதிகளிலும் மீண்டும் இரட்டை இலை வெல்லும் எந்த அலையும் எங்களை தடுக்க முடியாது” என்றார்.
த.வெ.க. தரப்பில் அமைச்சர் விக்னேஷிடம் பேசியபோது, “முதல்வர் லண்டனில் அஜித்தை சந்தித்ததும், ரேஸ் டிராக்கிற்கு போனதும் தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸை சிறப்பாக கட்டமைக்கதான். இதன் பின்னணியில் துளியும் அரசியல் இல்லை” என்றார்.
கவனிக்கிறோம் ப்ரோ!
(எஸ்.ஷக்தி)
