Home அரசியல் கரூர் விவகாரம்… விஜய் மீது வழக்குப் போடச் சொன்னேன்… திருமா பகீர்! – Kumudam

கரூர் விவகாரம்… விஜய் மீது வழக்குப் போடச் சொன்னேன்… திருமா பகீர்! – Kumudam

0



தருமபுரியில் இன்று நடைபெற்ற விசிக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தான் கேட்டதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு திமுகதான் முழுப் பொறுப்பு. கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம், திமுகவின் அணுகுமுறை குறித்து விவாதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், தவெகவை திமுக குறைத்து மதிப்பிட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், “கூட்டணிக் கட்சிகளை ஏன் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதிக்கவில்லை? திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது எனப் போராடினோம். ஆனால், கூட்டணியைக் காப்பாற்றிக் கொள்ள திமுக எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “விசிகவில் இருந்தபோது ஆதவ் என்னை முதல்வர் வேட்பாளர் என்று கூறினார். எனக்குப் பதவி ஆசை இருந்திருந்தால், ஆதவ் முன்வைத்த திட்டத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கலாமே” என்றும் திருமாவளவன் தெரிவித்தார். “திடீரென தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்ததால், பிற கட்சிகளுக்கு வருத்தம் ஏற்பட்டது” என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக, தவெக பிரசாரத்தின்போது விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் தாமதமாக வந்ததாலும், அவரைக் காண அதிகளவில் கூட்டம் திரண்டதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்ததாக திருமாவளவன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து “கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோது விஜய் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நான் கேட்டேன். ஆனால், விஜய் மீது திமுக ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “விஜய் மீது அன்று நம்பிக்கை இல்லை. ஆனால், இன்று எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. தவெகவுக்கு எதிரான அரசியலை திமுக ஏன் செய்யவில்லை? அதிமுக, பாஜகவின் ஆதரவை விஜய் கேட்கவில்லை; விசிக, காங்கிரஸின் ஆதரவைத்தான் கேட்டார்.

திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை விஜய் கேட்டபோது, திமுகவைத் தனிமைப்படுத்தும் நோக்கம் என நான் முதலில் சந்தேகப்பட்டேன். அதிமுக ஆதரவுடன்தான் நீங்கள் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள் என விஜய்யிடம் நான் கூறினேன்.

‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இடம்பெற வேண்டும் என நான் கோரினேன். எனது கோரிக்கையை முதலமைச்சர் விஜய் உடனே ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்தார்.

திருமண விழாவில் பேசிய திருமாவளவன் பல குற்றச்சாட்டுகளையும்  உண்மைகளையும் பகிரிந்து கொண்டதன் மூலம் தற்போது இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version