Home அரசியல் “ஊழல்… ஊழல்…” என ஒரே பாட்டு! தவெகவை வெளுத்து வாங்கிய எ.வ. வேலு! – Kumudam

“ஊழல்… ஊழல்…” என ஒரே பாட்டு! தவெகவை வெளுத்து வாங்கிய எ.வ. வேலு! – Kumudam

0



தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அப்போது பேசிய அமைச்சர் கீர்த்தனா, கடந்த ஆட்சியில் பட்டாசு லைசென்ஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் இருந்ததாகக் குறிப்பிட்டார். ஒரு லைசென்ஸ் பெற ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், தற்போது 177 பட்டாசு ஆலைகளுக்கு எந்தக் கட்டணமும் பெறாமல் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவை முன்னவர் செங்கோட்டையன், அமைச்சர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசிய நிலையில், ஊழல் என்ற வார்த்தைக்காக எதிர்க்கட்சியினர் எழுந்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்வினையாற்றியதால் விவாதம் மேலும் தீவிரமடைந்தது.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்குவது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்றும், பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆன்லைனில் மட்டும் லைசென்ஸ் வழங்க முடியாது என்றும், நேரடியாக ஆய்வு செய்த பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு பேசுகையில்,  ஆளும் கட்சியினர் எப்போது பேசினாலும் இடை இடையில் “கடந்த ஆட்சியில் ஊழல்… ஊழல்…” என ஒரே பாட்டை பாடுகிறார்கள். இப்ப என்ன நாங்க சட்டசபைக்கு வரக்கூடாது என்கிறீர்களா? உங்கள் பேச்சை கேட்க கூடாது என்கிறீர்களா? இதெல்லாம் நல்லது இல்லை என்று கடும் கோபம் அடைந்தார்.மேலும் அரசின் செயல்பாடுகள் மற்றும் தங்களது திறமை குறித்து அமைச்சர்கள் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, ஊழல் குறித்த குற்றச்சாட்டை தான் நேரடியாகக் கூறவில்லை என்றும், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே அவையில் குறிப்பிட்டதாகவும் கூறினார். அதற்கான ஆதாரங்களை தேவைப்பட்டால் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய தங்கம் தென்னரசு, தற்போதைய அரசில் லைசென்ஸ் புதுப்பித்தலுக்கும் பணம் வசூலிக்கப்படுவதாக சில அசோசியேஷன்கள் தங்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறி கேள்வி எழுப்பினார்.

இதற்கு சபாநாயகர் தலையிட்டு, அமைச்சர் தனது துறையின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கியிருந்தாலும், சர்ச்சைக்குரிய அந்த ஒரு வார்த்தையை தவிர்த்திருக்கலாம் என அறிவுறுத்தினார். மேலும், “சிலர் என்னிடம் கூறினார்கள்” என்ற அடிப்படையில் குற்றச்சாட்டுகளையும் எதிர்க்குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து சவால் விடும் இடமாக சட்டப்பேரவையை மாற்ற வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

இறுதியாக, அமைச்சர் கீர்த்தனா மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். இதனால் பட்டாசு லைசென்ஸ் விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version