தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் 22 கேரட் (BIS 916 ஹால்மார்க்) தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதில் முன்னணி நகை நிறுவனங்கள் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் பங்கேற்றன.
டெண்டர் நடைமுறையின் முடிவில், ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் இருந்து தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மொத்த தேவையில் 70 சதவீத மோதிரங்கள் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திடமிருந்தும், 30 சதவீத மோதிரங்கள் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடமிருந்தும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
முதற்கட்டமாக ஜூன் மாதம் முதல் 4 மாதங்களுக்கு தேவையான தங்க மோதிரங்களை வழங்குவதற்கான பணி ஆணை இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 1,28,499 குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் எடையுள்ள 22 கேரட் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, BIS ஹால்மார்க் கட்டணம், பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து உள்ளிட்ட தொடர்புடைய செலவுகளும் கொள்முதல் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் தங்க மோதிரம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் எளிய குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதுடன், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது இரண்டு முன்னணி நகை நிறுவனங்களுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக தங்க மோதிரங்கள் வழங்கும் பணிகள் தொடங்க உள்ளன.
