தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அடையாள அட்டை வழங்கியதற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது கல்லூரி காலத்தை நினைவுகூர்ந்த அவர், அப்போது காதல் தோல்வி, வேலை இல்லாத நிலை என இருந்ததாகவும், சொந்தமாக கார் கூட இல்லை என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
ஆனால் தற்போது முதலமைச்சர் விஜய் தனக்கு வேலைவாய்ப்பையும், காரையும் வழங்கியுள்ளதாகக் கூறிய சபரி ஐயங்கரன், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். இதைக் கேட்ட விஜய், தனது இருக்கையில் இருந்து திரும்பி சபரி ஐயங்கரன் பேசுவதைப் பார்த்து சிரித்தார். விஜய் தன்னை நோக்கிப் பார்த்ததும் சபரி ஐயங்கரன் கும்பிடுவது போன்ற சைகையை செய்து மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவைக்கு ஆட்டோவில் வரும்போது பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் தன்னை யார் என்று கேட்பார்கள் என்றும், தான் எம்.எல்.ஏ என்று கூறி அடையாள அட்டையை காட்டினாலும் முதலில் நம்புவதில்லை என்றும் சிரிப்புடன் தெரிவித்தார்.
தான் தற்போது வரை ரயிலில் பயணம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதும், மக்களுக்காக பணியாற்றும் தாங்களும் மகிழ்ச்சியாக இருப்பதும் தனக்கு பெரும் திருப்தி அளிப்பதாக சபரி ஐயங்கரன் தெரிவித்தார்.
சபை விவாதத்தின் நடுவே சபரி ஐயங்கரன் பேசிய இந்த நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான கருத்துகள், பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு முதலமைச்சர் விஜயின் கவனத்தையும் ஈர்த்தது.




