மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அலுவலக மாற்றம் முதல்வரின் தனிப்பட்ட வசதிக்காக மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்திக்க வரும் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பிற பார்வையாளர்கள் காத்திருப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை என்றும் அவர் கூறினார். முதலமைச்சரைச் சுற்றி பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் போதுமான பணியிட வசதி இல்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளில் சிலர் மிகவும் குறுகிய அறைகளில் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும், போதிய கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இல்லை என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இதனால், அனைவருக்கும் வசதியான பணிச்சூழலை உருவாக்கும் நோக்கில் தற்காலிகமாக அலுவலகத்தை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கினார். கடந்த காலங்களில் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முயற்சிகள் மேற்கொண்டதை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 ஆவது தளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதலமைச்சருக்கான அறை, தனிச் செயலாளர்களின் அலுவலகங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்ட அரங்கம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அலுவலக மாற்றத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.
