மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து தன்னை திருமணம் செய்துகொண்டதாக ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணையும், நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளும் நடைபெற்றன.
இந்த சூழலில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உயிரியல் தந்தை யார் என்பது தொடர்பான நீதிமன்ற விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் தான் குழந்தையின் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என பெயரிடப்பட்டது.
குழந்தையின் பிறப்பைத் தொடர்ந்து, அவரது பராமரிப்பு மற்றும் எதிர்கால தேவைகளுக்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரங்கராஜ், கடந்த சில மாதங்களாக குழந்தைக்கான தனது பொறுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் மகனுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகா ரங்கராஜுக்கான மொட்டை விழா கோயிலில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிசில்டாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். குழந்தையுடன் இருவரும் இருக்கும் புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சட்ட விவகாரம் மற்றும் தனிப்பட்ட சர்ச்சை காரணமாக இருவரும் தனித்தனியாக கவனம் பெற்ற நிலையில், மகனின் முக்கியமான சடங்கில் இருவரும் ஒன்றாக பங்கேற்றிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வெளியான புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
