கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கி நியமன ஆணைகளை பிறப்பித்தது.
இந்த அரசு பணி நியமனங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு வழங்கிய 31 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவது நீண்டகாலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதேபோல், வழக்கமான அரசு பணி நியமன நடைமுறைகளைத் தவிர்த்து குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டும் பணி வழங்குவது தொடர்பாகவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் கொள்கை முடிவை கேள்விக்குட்படுத்துவது தொடர்பாக நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
“அரசின் கொள்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்?” என்றும், ஒரு குடும்பத்தில் ஒரே நபர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்திருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மகன் அல்லது மகளுக்கு அரசு வேலை வழங்கக்கூடாதா? என்றும் உச்சநீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது. மேலும், கரூர் சம்பவம் ஒரு துயரச் சம்பவம் என்பதால் அதனை அரசியலாக்கக் கூடாது என்றும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கியதில் என்ன பிரச்சினை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுள்ளது. மேலும், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கிய தமிழக அரசின் முடிவுக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.
