தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த 5-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 6) வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.தமிழ்நாட்டிற்கும் கர்நாடகவிற்கும் காவிரி விவகாரம் நீடித்து வரும் நிலையில் கர்நாடகவின் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று பேசி வரும் நிலையில் இது குறித்து முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது குறித்து சட்டசபையில் காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிப்பதில்லை என விமர்சித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது தேவையில்லாதது என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வேறு வழியின்றியே கர்நாடகா உபரி நீரை திறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.




