சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 05 தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொது விவாதம் இன்று(ஆகஸ்ட் 07) தொடங்கியது. பட்ஜெட் விவாதத்தின்போது பேசிய ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், ஆதவ் அர்ஜூனாவுடன் தனக்கு நீண்டகால நட்பு இருப்பதாகவும், இருவருக்கும் இடையிலான நட்பை அரசியல் ரீதியாக பிரிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவைத் தலைவரிடம் கூறியது கவனத்தை பெற்றுள்ளது.
மேலும், திமுக சார்பில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரியபோது, ஆதவ் அர்ஜூனா தன்னை அழைத்துச் சென்று கட்சியில் தனக்காக பேசியதாக வசந்தம் கார்த்திகேயன் நினைவுகூர்ந்த நிலையில், தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் ஆதவ் அர்ஜூனா செய்த உதவியை குறிப்பிடாமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வம்பில் இழுத்துவிடுவது போல் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் என். ஆனந்தன், ”ஆதவ் அர்ஜூனா எந்தப் பிரச்சினையும் பேசாமல் அமைதியாக இருக்கும்போது, அவரது பெயரை ஏன் இந்த விவகாரத்தில் கொண்டு வருகிறீர்கள்” என கேள்வி எழுப்பினார். இப்படி ஆதவ் அர்ஜூனாவை வம்பிழுக்கும் விதமாக வசந்தம் கார்த்திகேயன் செய்த செயலால், துணை சபாநயகர் டென்ஷனாகி “நீங்க சப்ஜெக்ட்டுக்கு வாங்க” என்று பலமுறை கூற வேண்டியதாயிற்று.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை பொறுத்தவரை, கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் வியூகக் குழுவில் பணியாற்றியவர். அதன்பின்னர் அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் ஆதவ் அர்ஜூனாவுடனான தனது பழைய நட்பையும், தனது அரசியல் பயணத்தில் அவர் செய்த உதவியையும் வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
