தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தற்போது தமிழ்நாட்டின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் தாக்கல் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் தாக்கலில் ஏராளமான திட்டங்களும் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக அரசு ஊழியர்களுக்கான பல சிறப்பு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம், குறிப்பிட்ட கால இடைவெளியில், மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ‘கார்பஸ்’ நிதி தற்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு, 5 லட்சம் ரூபாயாகவும், சிறப்பு சிகிச்சைகளுக்கு, 10 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.இத்திட்டம், ஜூலை 1 முதல், 2031 ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். ‘யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்’ நிறுவனம் தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதில், ஒரு அரசு ஊழியருக்கு, ஆண்டுக்கு, 4,500 ரூபாய் என, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அரசு பிரீமியம் செலுத்துகிறது. இதற்காக ஊழியரின் மாத சம்பளத்தில் இருந்து, 390 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல், கூடுதலாக வரும் பிரீமிய தொகையை, அரசே ஏற்க உள்ளது.
இதுதவிர, அரசு ஊழியர்களுக்கான, ‘கார்பஸ்’ நிதியின் கீழ், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு, 27 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். மேலும், துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு, 10,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் இருந்தால், அரசே பிரீமியம் தொகையை ஏற்கும்.
ஓய்வூதியருக்கு ஆண்டுக்கு, 7,728 ரூபாய் அரசு பிரீமியம் செலுத்த உள்ளது. இதற்கு, ஓய்வூதியர்களிடமிருந்து மாதம், 644 ரூபாய், ஜூலை மாத ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஓய்வூதிய துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு, இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவர்.
இவர்களிடம் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படாது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் சித்திக் வெளியிட்டுள்ளார்.
