சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாமகவில் நீண்ட காலமாக நீடித்து வந்த உட்கட்சி மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் செயல்பாடுகளில் இருந்து டாக்டர் ராமதாஸ் முற்றிலும் விலகியுள்ளார். இதனால் கட்சியின் முழு கட்டுப்பாடும் தற்போது அன்புமணி ராமதாஸ் கைகளுக்குச் சென்றுள்ளது. இதையடுத்து பாமகவின் தலைவராக அன்புமணி முழு பொறுப்பையும் ஏற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாமக கூட்டணியும் முக்கிய காரணம் என்ற நம்பிக்கையில் உள்ள அன்புமணி, அடுத்தகட்டமாக பாமகவின் அரசியல் செல்வாக்கை தேசிய அளவில் உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பாமக தொண்டர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக சௌமியா அன்புமணியை மத்திய அமைச்சரவையில் இடம் பெற செய்வதே முக்கிய டார்கெட்டாகவும் , அதற்கான முயற்சிகள் கட்சி மட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பாமக என்டிஏ கூட்டணியில் இணைந்தததை தொடர்ந்து அதன் மூலம் அன்புமணி ராஜ்யசபா சீட்டை பெற்ற நிலையில், தற்போது அவரது அரசியல் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. மத்திய அமைச்சரவையில் இடம்பிடிப்பதே பாமகவின் தற்போதைய டார்கெட்டாக இருப்பதாகவும், ஆனால் தேர்தலுக்குப் பிறகு டெல்லி பாஜக தலைமை அன்புமணியை போதிய அளவில் கவனிக்கவில்லை என்ற அதிருப்தி அவரிடம் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே முதற்கட்டமாக கட்சிக்குள் இருந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சௌமியா அன்புமணியை அமைச்சரவையில் அமர வைப்பதற்கு தற்போது என்டிஏ கூட்டணி தடையாக இருக்கலாம் என்று கருதப்படுவதால் இந்த கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டராங்களில் பேசிவருகின்றன.
இதன் பின்னணியில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி தற்போது பாமக தீவிரமாக பேசி வரும் நிலையில் இந்த காரணத்தை வைத்து என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) அரசியல் ரீதியாக நெருங்கும் வாய்ப்பையும் பாமக பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனினும், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் (விசிக) நெருக்கமான உறவை கொண்டிருக்கும் த.வெ.க., பாமகவை கூட்டணியில் இணைத்தால் அது கூட்டணிக்குள்ளேயே புதிய விரிசல்களை உருவாக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சௌமியா அன்புமணியை மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதில் பாமக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சி வெற்றியடையுமா அல்லது அரசியல் சமன்பாடுகளில் தோல்வியடையுமா பொறுத்திருந்து பார்போம்.
