Home உலகம் பேய் வீடுகளில் இரவு வேலை… ரூ.52 ஆயிரம் சம்பளம்.. உருவான வினோத வேலைவாய்ப்பு..! – Kumudam

பேய் வீடுகளில் இரவு வேலை… ரூ.52 ஆயிரம் சம்பளம்.. உருவான வினோத வேலைவாய்ப்பு..! – Kumudam

0



ஜப்பானில் பேய் வீடுகளில் இரவு பணி செய்தால் ரூ.52 ஆயிரம் சம்பளம் என்ற அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜப்பானில் ரியல் எஸ்டேட் துறையில் வினோதமான ஒரு புதிய வேலை உருவாகியுள்ளது. கொலை, தற்கொலை, தீ விபத்து அல்லது தனிமையில் உயிரிழப்பு போன்ற துயர சம்பவங்கள் நடந்த வீடுகளில் இரவு தங்குவதற்காக சிலர் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்காக ஒரு இரவுக்கு 88,000 யென், இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000 வரை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் இதுபோன்ற வீடுகள் ‘ஜிகோ புக்கென்’ (Jiko Bukken) என அழைக்கப்படுகின்றன. அதாவது, ஒருவர் அசாதாரணமான அல்லது துயரமான சூழ்நிலையில் உயிரிழந்த வீடுகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, முதியவர்கள் தனியாக உயிரிழந்து பல நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படும் சம்பவங்களும் இதில் அடங்கும்.

ஜப்பான் சட்டப்படி, இதுபோன்ற வீடுகளின் கடந்தகால வரலாற்றை வீட்டு உரிமையாளர்கள் அல்லது ரியல் எஸ்டேட் முகவர்கள், வாங்குபவர்கள் மற்றும் வாடகைதாரர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதனால் பலர் அந்த வீடுகளில் குடியேற தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, பல வீடுகள் நீண்ட காலமாக காலியாகவே உள்ளன.

இந்த நிலையில், வாடகைதாரர்கள் மற்றும் வாங்குபவர்களின் அச்சத்தை போக்குவதற்காக, சில நிறுவனங்கள் ‘பேய் வீட்டு கண்காணிப்பாளர்களை’ நியமிக்கத் தொடங்கியுள்ளன. அவர்கள் இரவு முழுவதும் வீட்டுக்குள் தங்கி, கேமராக்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு கருவிகள் மூலம் அங்கு ஏதேனும் அசாதாரண நிகழ்வுகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்கின்றனர். எந்தவிதமான அமானுஷ்ய செயல்பாடுகளும் பதிவாகவில்லை என்றால், அந்த வீடு பாதுகாப்பானது என சான்றிதழ் வழங்கப்படுகிறது. சில நிறுவனங்கள், பின்னர் உண்மையான பேய் நடமாட்டம் இருப்பது நிரூபிக்கப்பட்டால் இழப்பீடு வழங்குவதாகவும் கூறுகின்றன.

ஜப்பானில் வயதான மக்கள் தொகை அதிகரிப்பு, பிறப்பு விகிதம் குறைதல் மற்றும் நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் போன்ற காரணங்களால் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த காலங்களில் துயர சம்பவங்கள் நடந்த வீடுகள் 20 முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன அல்லது வாடகைக்கு விடப்படுகின்றன.

வீட்டு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குறைந்த விலை வீடுகளைத் தேடும் இளம் தலைமுறையினரிடம் இத்தகைய சொத்துகளுக்கு ஆர்வம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ரியல் எஸ்டேட் துறையும் பேய் வேட்டையும் இணைந்த இந்த வினோதமான தொழில், காலியாக உள்ள வீடுகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான புதிய முயற்சியாக மாறியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version