Home அரசியல் ஊராட்சி செயலாளர் பணியிடங்கள்… புதிய ஊழல் குற்றச்சாட்டு! – Kumudam

ஊராட்சி செயலாளர் பணியிடங்கள்… புதிய ஊழல் குற்றச்சாட்டு! – Kumudam

0


முந்தைய தி.மு.க. அரசில் நடைபெற்ற ஊழல்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. அந்தப் பட்டியலில் ஊராட்சி மன்றங்களில் நடைபெற்ற சட்டவிரோத பணி நியமனங்களும் தற்போது பல்லை இளிக்கின்றன. ஊராட்சிச் செயலாளர்கள் பதவியை ஏலம் விட்ட முந்தைய தி.மு.க. ஆட்சி பிரமுகர்கள் மீது த.வெ.க அரசு சாட்டையை சுழற்றுமா என்பதுதான் ஹாட்டான கேள்வி!

இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலர்கள் சிலரிடம் பேசினோம். *தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில், தொகுப்பு வீடுகளுக்கு கட்டிட அனுமதி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை ஊராட்சி > செயலாளர்கள்தான் கவனிக்கிறார்கள். இந்தபிரிவில் மட்டுமே 1,483 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்ப முந்தைய தி.மு.க. ஆட்சியில் நேரடி நேர்காணல் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, ‘பத்தாம் வகுப்பில் 485 மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நேர்காணல் நடைபெறும்’ என கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியான நிலையில், திடீரென்று அந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் விசாரித்ததில், “நேர்காணலுக்கு தயாரானவர்கள் யாருமே முந்தைய தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என எந்தவொரு ஆளும்கட்சி பிரமுகர்களின் சிபாரிசுகளையும் நாடவில்லை. ஆனால், இந்தப் பதவிகளுக்கு முந்தைய ஆளும்கட்சி வி.ஐ.பி.க்கள் பலர் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என ஏலம்விட்டு, நூற்றுக்கணக்கானோரிடம் பணம் கறந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது.

பல மாவட்டங்களில் முந்தைய ஆட்சியாளர்கள் பரிந்துரைத்த நபர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆட்சியர்கள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் கடுப்பான ஆளும்கட்சி வி.ஐ.பி.க்கள், தாங்கள் பணம் வசூலித்த நபர்களுக்கு பணி நியமனம் இல்லையென்றால் வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து நேர்காணலையே ரத்து செய்ய வைத்துவிட்டார்கள் என்ற பகீர் தகவல் கிடைத்தது.

தேர்தல் காலம் வரை ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப முந்தைய ஆட்சி மேலிடம் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், முந்தைய ஆளும்கட்சி பிரமுகர்களை தொடர்புகொண்டு தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்தால் முந்தைய ஆட்சி மேலிடத்திற்கு மிக நெருக்கமான முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள்” என்றார்கள்.

நேர்காணலுக்கு தயாரான விண்ணப்பத்தாரர்கள் சிலரிடம் பேசினோம் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நேரடி நேர்காணல் முறையை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஊராட்சி செயலாளர் பணியிடத்தை நிரப்பினால், கிராமங்களில் நேர்மையான நிர்வாகத்தை தர முடியும்.” என்றனர்.
இதுகுறித்து கேட்க உள்ளாட்சித் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை தொடர்புகொண்டோம். அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது!



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version