அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஆனந்த், கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று, புதிய உறுப்பினர்கள் அனைவரும் தவெக குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதப்படுவார்கள் என்றும், அவர்களது அரசியல் பயணத்தில் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தலைவர் விஜய்யின் மீதான மக்களின் நம்பிக்கையே கட்சியின் வளர்ச்சிக்குக் காரணம் என குறிப்பிட்ட அமைச்சரும் தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொண்டர்களின் அர்ப்பணிப்புதான் தவெகவை வலுப்படுத்தியுள்ளதாக கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் என அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருப்பதாகவும் ஆனந்த் தெரிவித்தார்.
மேலும், ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அறிவித்த அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சியினர் முழு ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
