சென்னை: ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வேட்டையனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் கூலி படத்தின் ஸ்டார் காஸ்டிங் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு. அதன்படி இந்தப் படத்தில் ரஜினியுடன் நாகர்ஜுனா, செளபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்கானது. அதில் நாகர்ஜுனா நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் கூலி படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். நாகர்ஜூனாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தபோது அதனை படப்பிடிப்பு தளத்தில் இருந்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து படக்குழு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கூலி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்கானது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிவீட் செய்துள்ளார். அதில், இரண்டு மாத கடின உழைப்பு வீணாகிவிட்டது, இதில் பங்கேற்றவர்கள் அனைவரின் உழைப்பும் ஒரு வீடியோவால் வீணானது. தயவுசெய்து ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து லோகேஷ் இந்த டிவிட்டுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டதை ஒட்டி, வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு, ரஜினியும் கூலி படக்குழுவினரும் ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில், லோகேஷையும் டான்ஸ் ஆட வருமாறு ரஜினி அழைக்க, அதற்கு அவர் கிரேட் எஸ்கேப் ஆகியிருந்தார். வேட்டையன் பாடலுக்கு கூலி டீம் வைப் கொடுத்த சில தினங்களிலேயே, ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டு வேட்டையனுக்கு வேட்டு வைத்துவிட்டனர்.
