Home சினிமா என்கவுண்டருக்கு ஆதரவாக களமிறங்குகிறானா ‘வேட்டையன்’? சர்ச்சையை உருவாக்கிய ரஜினி பட ப்ரிவ்யூ! – Kumudam

என்கவுண்டருக்கு ஆதரவாக களமிறங்குகிறானா ‘வேட்டையன்’? சர்ச்சையை உருவாக்கிய ரஜினி பட ப்ரிவ்யூ! – Kumudam

0



ஜெய்பீம் வெற்றியை தொடர்ந்து, தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சுவாரியர் உட்பட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனால், அதே தேதியில் வெளியாகவிருந்த சூர்யாவின் கங்குவா ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரஜினியை பொறுத்தவரை, ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர் அவர் கேமியோ செய்த ‘லால் சலாம்’ திரைப்படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இதனால் வேட்டையன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தில் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக ரஜினிகாந்த் நடித்துள்ளதாக பேசப்படுகிறது. தொடர்ந்து வேட்டையன் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதோடு, பாடல்களும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

இந்நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் வெளியிட்டது படக்குழு. 

இந்த டீசர், அமிதாப்பச்சன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள, அதற்கு ஜூனியர் காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, தவறு செய்பவர்களை வேட்டையனான ரஜினிகாந்த் என்கவுண்டர் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், படத்தின் எதிர்பார்ப்பு எகிறயுள்ளது. 

அதோடு, “இந்த நாட்டில் லட்சக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது, இவரை மட்டும் அடையாளம் தெரிகிறது. எப்படி இது?” என்று அமிதாப்பச்சன் கேட்பதோடு, “என்கவுண்டர் என்ற பெயரில் கொலை பண்ணும்போது தான், ஹீரோயிசமா?..” என்று நறுக் கேள்விகளை கேட்கிறார். இந்தபக்கம் ரஜினிகாந்தோ, “என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல; இனிமேல் இது மாதிரி குற்றம் நடக்கக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் ஹீரோயிசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

டீசரை பார்த்தால் என்கவுண்டருக்கு ஆதரவாகத்தான் படம் இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். காரணம், ஏற்கனவே தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் என்கவுண்டர்கள் அதிகரித்துவரும் நிலையில், இப்படம் என்கவுண்டரை ஊக்குவிக்கும் அளவிற்கு உருவாகியுள்ளதா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

மறுபக்கம் சினிமா விமர்சகர்கள், ஜெய்பீம் போன்ற ஒரு படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல், என்கவுண்டருக்கு ஆதரவாக படம் எடுத்திருக்க மாட்டார், நிச்சயமாக இதில் பெரிய ட்விஸ்ட் இருக்கும் என்று கூறுகின்றனர். எது எப்படியோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version