இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “சட்டமன்ற நேரலை துண்டிக்கப்பட்டது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் மற்றும் கருத்துகளை மக்கள் அறிய விடாமல் தடுப்பது ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்கு சமமானது. எனவே, சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, நேரலை நிறுத்தப்பட்டது அரசியல் நோக்கத்தால் அல்ல; அது முழுக்க தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டது என விளக்கம் அளித்துள்ளார். மேலும், அரசு நேரடி ஒளிபரப்பை ரத்து செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் துறைசார்ந்த கேள்விகளை விடாமல் தொடர்பில்லாத கேள்விகளை எழுப்புவதாகவும், கடந்த ஆண்டின் தவறுகளை மறைக்க புதிய பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் அரசு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “எதிர்காலத்தில் சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும். நேரலை நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நேரத்தில் நான் சட்டமன்றத்திற்குள் இருந்ததால், அது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது” என்றார்.
சட்டமன்ற நேரலை விவகாரம் அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து சபாநாயகர் தரப்பில் என்ன விளக்கம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
