
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்றும், எந்த மாநிலத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்பதை ஒன்றிய அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதுதான் தற்போது அரசியல் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. ஏனெனில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 12-ம் தேதி சட்டப்பேரவையிலும், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்றும், தொகுதி மறுவரையறையை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
குறிப்பாக, மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-ஆகவே நிரந்தரமாக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் தொடர வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், தற்போது “மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது” என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே அவர் முன்வைத்திருப்பது, 543-ஐ தாண்டி மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மறைமுகமாக ஒப்புதல் அளிக்கும் நிலைப்பாடா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில்,அதிமுக ஐடி விங் இதுதொடர்பாக விமர்சித்துள்ளது.
https://x.com/AIADMKITWINGOFL/status/2090362537045000347?s=20
அதில், “திரைப்படங்களில் பல்டி அடிச்சி டான்ஸ் ஆடுவதில் பெயர் பெற்றவர் நம்ம நடிகர் விஜய் ப்ரோ… அதையெல்லாம் மிஞ்சிய அந்தர் பல்டியை, தற்போது #Delimitation விவகாரத்தில் அடித்துள்ளார் ப்ரோ முதலமைச்சர் விஜய் ….இப்போது நீங்கள் சொல்வதை தான் மத்திய அரசும் சொல்லியது, இதனால் தான் அஇஅதிமுக தொகுதி வரையறை மசோதா வந்தபோது ஆதரித்தது! இப்படி பல்டி அடிப்பதற்கு எதற்கு ஒரு தீர்மான டிராமா?” என்று அதிமுக ஐடிவிங் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.



