முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் எம்.பி.க்கள் தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தி.மு.க. எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க. ஏற்கனவே நிபந்தனை விதித்திருந்த நிலையில், தற்போதைய எம்.பி.க்கள் கூட்டத்தை அக்கட்சி புறக்கணித்துள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.
திமுக அதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் இதையடுத்து தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தவெகவின் அடுத்தக்கட்ட முடிவு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புறக்கணிப்பவர்கள் :
திமுக – மக்களவை+ மாநிலங்களவை 30
அதிமுக – மாநிலங்களவை 04
தேமுதிக – மாநிலங்களவை -01
மக்கள் நீதி மய்யம் – மாநிலங்களவை – 01
பாமக – மாநிலங்களவை – 01





