வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அந்நாட்டை நிலைகுலையச் செய்துள்ளன. இதில் இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவாகப் பதிவாகியுள்ளது, இது கடந்த ஒரு நூற்றாண்டில் அந்நாடு கண்டிராத மிக மோசமான இயற்கை பேரிடராகக் கருதப்படுகிறது.
வெனிசுலாவின் சுதந்திர தின தேசிய விடுமுறை கொண்டாட்டத்தின் போது, உள்ளூர் நேரப்படி மாலை 6:04 (இந்திய நேரம் காலை 3:30) மணியளவில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் கராகஸ் நகருக்கு மேற்கே உள்ள யாராகுய் மாநிலத்தில் 7.2 ரிக்டர் அளவிலும், அதற்கு அடுத்த 39ஆவது வினாடியில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு வலுவான நிலநடுக்கமும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதன் அதிர்வுகள் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொலம்பியா நாட்டின் தலைநகர் பொகோடா வரை உணரப்பட்டது. இதைத்தொடர்ந்து வெனிசுலாவின் வடக்குக் கடலோரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் தலைநகர் கராகஸில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உயிர் பயத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும், நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையம், மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நகருக்கான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டு, இணையச் சேவைகளும் முடங்கியுள்ளன. பாதுகாப்பு கருதி இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சாக்காவ் பகுதியின் மேயர் கூறுகையில், அங்கு இரண்டு பெரிய கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாகவும், இடிபாடுகளில் இருந்து 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது 500-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக இதுவரை உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது அமெரிக்கா, பிரேசில், எல் சால்வடார் மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள் வெனிசுலாவிற்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.







