
சட்டமன்ற தேர்தல் காரணமாக திருவெற்றியூர் மண்டலக்கூட்டம் நடைபெறாமல் இருந்தது. 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ம் தேதி மண்டலக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்ட அரங்கில் இருந்த ஸ்டாலின் புகைப்படம் தொடர்பாக 6-வது வார்டு காங்கிரசு கவுன்சிலர் திரவியம் பேசுகையில், சென்னை மாநகர மேயர் ப்ரியா அரசு நிகழ்ச்சிகளில் ப்ரோட்டோகால் பின்பற்றுவது பற்றி பேசுகிறார். அவருக்கு காங்கிரசு கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அதே ப்ரோட்டோகால் இந்த அரங்கில் பின்பற்றப்படவில்லை. எந்த பதவியிலும் இல்லாத முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் இங்கு இருக்கிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என பேசி கொண்டே இருந்தார். இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய திரவியம், முன்னாள் முதல்வர் அடிப்படையில் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டால், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என பேசினார்.
இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், காங்., கவுன்சிலர் திரவியத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் பின்னர் திருவெற்றியூர் தவெக எம்எல்ஏ செந்தில்குமார், காங்கிரசு கவுன்சிலர் திரவியம் அளித்த புகாரின் பேரில் மண்டல அலுவலகத்தில் இருந்து ஸ்டாலின் புகைப்படத்தை மண்டல அலுவலர் அகற்றினார்.
இந்நிலையில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு காரணமான காங்கிரசு கவுன்சிலர் திரவியத்திற்கு திமுக நிர்வாகிகள் தொடர்ந்து போனில் கொலை மிரட்டல் விடுத்தனர். இதை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



